குடியரசு தினம்: தர்மபுரி ஆட்சியர் திவ்யதர்ஷினி தேசியக்கொடி ஏற்றினார்

தர்மபுரியில், 73 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.

Update: 2022-01-26 07:30 GMT

சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு, ஆட்சியர் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். 

தர்மபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில், குடியரசு தினவிழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு,  மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி, தேசியக்கொடியினை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

தொடர்ந்து, தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த 27 காவலர்களுக்கு 2022 -ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சரின் காவலர் பதக்கங்களையும், பல்வேறு அரசுத்துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 50 அலுவலர்கள் மற்றும்  கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய 39 மருத்துவர்களுக்கும்,  12 தூய்மை பணியாளர்களுக்கும் என மொத்தம் 101 நபர்களுக்கு நற்சான்றிதழ்களை, ஆட்சித்தலைவர் வழங்கினார்.

பின்னர், சிறப்பாக செயல்பட்ட அரூர் வட்டாட்சியர் அலுவலகம், சிறந்த காவல் நிலையமாக அதியமான் கோட்ட காவல் நிலையம்,  பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, நாகாதாசம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்,  தர்மபுரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம், குண்டலமடுவு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, நரசிங்கபுரம் கோம்பை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கருங்கல்மேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய 3 பள்ளிகள் ஆகியவற்றுக்கு கேடயங்கள் பரிசாக வழங்கப்பட்டது.

பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் 2021-2022 ஆம் கல்வியாண்டில் மகிழ் கணிதம் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு எளிய வழியாக கணிதம் கற்பித்தல் பயிற்சி சிறப்பாக நிறைவு செய்த 9 ஆசியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், மாவட்ட அளவில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு பெற்று தந்தமைக்காக மாவட்ட அளவில் சிறந்த வங்கியாக தேர்வு செய்யப்பட்ட தர்மபுரி இந்தியன் வங்கிக்கும், மாவட்ட அளவில் சிறந்த வங்கி கிளைகளாக தேர்வு செய்யப்பட்டு முதலிடம் பெற்ற காரிமங்கலம் இந்தியன் வங்கி கிளைக்கும், இரண்டாம் இடம் காரிமங்கலம் தமிழ்நாடு கிராம வங்கி கிளைக்கும், மூன்றாம் இடம் பெற்ற தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கும் விருதுகளும் வழங்கப்பட்டன. 

மாவட்ட அளவில் மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி சிறந்த மருத்துவமனைகளாக தேர்வு செய்யப்பட்ட தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரூர் அரசு மருத்துவமனை மற்றும் தருமபுரி சுபா மருத்துவமனை ஆகிய 3 மருத்துவமனைகளை பாராட்டி நற்சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி வழங்கினார்.

நிகழ்ச்சியில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி. கே. மணி, தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பி. வெங்கடேஸ்வரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, தாசில்தார் ராஜராஜன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News