தர்மபுரி மாவட்டத்தில் விடிய, விடிய பெய்த மழை; விவசாயிகள் மகிழ்ச்சி

தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று அதிகாலை வரை விடிய, விடிய மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Update: 2021-09-03 07:30 GMT

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் பெய்த மழை.

தர்மபுரி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கருமேகங்கள் திரண்டன. பின்னர் திடீரென மழை பெய்ய தொடங்கியது. பல்வேறு இடங்களில் பரவலாக பெய்த இந்த மழை நேற்று அதிகாலை வரை விடிய, விடிய நீடித்தது. இதில் அதிகபட்சமாக பாப்பிரெட்டிப்பட்டி யில் 62.2 மில்லி மீட்டர் மழை பதிவானது.

மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

தர்மபுரி-17, பாலக்கோடு-32, மாரண்டஅள்ளி- 1, பென்னாகரம்-22, அரூர்-24, ஒகேனக்கல்-10, பாப்பிரெட்டிப்பட்டி-62.2 என மாவட்டத்தில் மொத்தம் 168.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

இந்த மழை காரணமாக நேற்று தர்மபுரி மாவட்டம் முழுவதும் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் முழுமையாக குறைந்தது. வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.

தர்மபுரி சுற்றுவட்டார பகுதிகளில் ஆடிப்பட்டத்தில் சாகுபடிக்கு உழவு நடந்த விவசாய நிலங்களில் இந்த மழை காரணமாக ஈரப்பதம் ஏற்பட்டது. இதனால் பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Tags:    

Similar News