தர்மபுரியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஆய்வுக்கூட்டம்
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அதுல் ஆனந்த் பங்கேற்றார்.
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம் முதன்மை செயலாளரும் தர்மபுரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அதுல் ஆனந்த், தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அதுல் ஆனந்த் பேசுகையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் மழைக் காலங்களில் அதிகம் பாதிப்புக்குள்ளாகக் கூடிய இடங்கள், நடுத்தர பாதிப்புக்குள்ளாகக் கூடிய இடங்கள், குறைவான அளவு பாதிப்பு ஏற்படக் கூடிய இடங்கள் உள்ளிட்டவற்றைக் கண்டறிந்து போதிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அலுவலர்கள் முழுமையாக மேற்கொள்ள வேண்டும்.
இத்தகைய இடங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளச் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
வடகிழக்கு பருவமழை காலத்தில் எதிர்பாராமல் ஏற்படும் புயல், மழை வெள்ள பாதிப்புகளைப் போர் கால அடிப்படையில் சரிசெய்யவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இழப்புகளை தடுக்கவும், மழைக் காலத்தை எதிர்கொள்ளவும், ஒவ்வொரு துறையினரும் அவசர காலத் திட்டம் தயாரித்து அதன்படி செயல்பட தயார் நிலையில் இருக்க வேண்டும்.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் உபயோகப்படுத்தத் தேவையான வயர்லெஸ் கருவிகளைத் தயார் நிலையில் வைத்து கொள்ள வேண்டும். இப்பேரிடர் காலங்களில் வருவாய்த்துறை, உள்ளாட்சி துறை, பொதுப்பணித்துறை போன்ற துறைகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தீயணைப்புத் துறையின் மூலமாக இயற்கை இடர்பாடுகள் மற்றும் தீவிபத்துகளின் போது சீரிய முறையில் செயல்பட அனைத்து அரசு துறை அலுவலர்களுக்கும் முன் தடுப்பு ஒத்திகை நிகழ்வுகள் மற்றும் கடந்த ஆண்டுகளில் வெள்ளம் பாதித்த பகுதிகளில், முன் தடுப்பு ஒத்திகை நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயணைப்பு வண்டிகள், தேவையான தீயணைப்பு கருவிகள், பாதுகாப்பு அலுவலர்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பொதுமக்களுக்கும் பேரிடர் கால பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும்.
அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உயிர் காக்கும் மருந்துகளை போதிய அளவில் இருப்பு வைத்திருக்க வேண்டும். கனமழை காரணமாக தொற்று நோய்கள் ஏற்படாமல் இருக்க நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். தேவையான மருத்துவ உபகரணங்கள், ஜெனரேட்டர்கள், ஆம்புலன்ஸ், நடமாடும் மருத்துவக் குழுக்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மேலும், மருத்துவத்துறையின் சார்பில் பொதுமக்களுக்குத் தேவையான மருந்துகள், படுக்கை வசதிகள், மருத்துவ பொருட்கள் ஆகியவை தேவையான அளவு இருக்க வேண்டும். மேலும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் உரிய நேரத்தில் பணியில் இருக்க வேண்டும்.
பேரிடர் காலங்களில் தகவல்களை உடனுக்குடன் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக பேரிடர் மேலாண்மை சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு பணிபுரியும் பணியாளர்கள் வயர்லெஸ் மூலம் இயற்கை இடர்பாடுகளின் போது உடனடி தகவல்களைப் பெற்று தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் உடனுக்குடன் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பிரிவில் 1077 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும், 04342-231500, 04342-231508, 04342-230067, 04342-231077 ஆகிய தொலைபேசி எண்கள் மூலமாகவும் பொதுமக்கள் உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம்.
மேலும் வடகிழக்கு பருவமழை பேரிடர் காலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக பேரிடர் மேலாண்மை சிறப்பு கட்டுப்பாட்டு பிரிவில் தேவையான STD வசதியுடன் கூடிய தொலைபேசி, FAX இணையதள வசதியுடன் கூடிய கணினி ஆகியவை தயார் நிலையில் இருக்க வேண்டும். 24 மணி நேரமும் அலுவலக பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டிருக்க வேண்டும். தினசரி மழையளவு மற்றும் மனித உயிரிழப்பு, கால்நடை இறப்பு, சேதம் போன்ற பாதிப்புகள் குறித்த விபரங்கள் ஏதேனும் இருப்பின் உடனடியாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் தெரிவிக்க வேண்டும்.
மழைக்கால பேரிடர் காலத்திற்கு முன்னதாக பழுதான மின்சார மின்கம்பங்கள், மின்சார கம்பிகள், சாய்ந்து விழும் நிலையில் உள்ள மின்சார சாதனப் பொருட்களை மின்சாரத்துறையின் மூலம் ஆய்வு செய்து, ஏற்பட்ட பழுதுகளை உடனடியாக சரி செய்ய வேண்டும். மேலும், மின்சார மின்கம்பங்கள், மின்சார பொருட்கள் தேவையான அளவு இருப்பில் வைத்திருக்க வேண்டும். மின்சாரம் இல்லாத நேரங்களில் அத்தியாவசிய தேவைகளுக்கு ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்குவதற்கு தேவையான வசதிகளை தயார் நிலையில் வைத்துக் கொள்ளவேண்டும்.
வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறையின் மூலம் விவசாயிகளுக்கு வடகிழக்கு பருவமழை குறித்து உரிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் கால்நடை பராமரிப்புத்துறையினர் கால்நடைகளை மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய கால்நடை பாதுகாப்பு மற்றும் பராமரிப்புகள் குறித்து பொதுமக்களிடையே உரிய விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும். பொதுமக்களுக்குத் தேவையான பால், பாதுகாக்கப்பட்ட குடிநீர், உணவுப்பொருட்கள், தேவையான அளவு இருப்பில் உள்ளதை உணவுத்துறை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.
பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை போன்ற துறைகளின் மூலம் மழைக்காலங்களில் வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்வதற்கு மணல் நிரப்பப்பட்ட பைகளை தேவையான அளவு இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்வதற்கும், மழைநீர் தேங்கும் பகுதிகளில் உடனுக்குடன் நீரினை வெளியேற்றுவதற்கும் தேவையான ஜேசிபி இயந்திரங்கள், மர அறுவை இயந்திரங்கள் போன்றவற்றையும் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும். மேலும், பேரிடர் மழைக்காலங்களில் பொதுமக்களைத் தங்க வைப்பதற்கு தேவையான முகாம்களை தேர்வு செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு முதன்மை செயலாளர்/ தொழிலாளர் நல ஆணையர் / தருமபுரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனைவர்.அதுல் ஆனந்த், தெரிவித்தார்கள்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சு.அனிதா, தருமபுரி சார் ஆட்சியர் சித்ரா விஜயன், உதவி ஆட்சியர் (பயிற்சி) கெளரவ்குமார்,திட்ட அலுவலர் மகளிர் திட்டம் பாபு, பொதுப்பணித்துறை நீர் வள ஆதார செயற்பொறியாளர் குமார், அரூர் வருவாய் கோட்டாட்சியர் முத்தையன், இணை இயக்குநர் வேளாண்மை வசந்த ரேகா, இணை இயக்குநர் மருத்துவ பணிகள் மரு.மலர்விழி வள்ளல், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார், துணை இயக்குநர் சுகாதார பணிகள் மரு.செளண்டம்மாள், துணை இயக்குநர் தோட்டக்கலைத்துறை மாலினி, கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குநர் மரு.வேடியப்பன், உதவி இயக்குநர்கள் சீனிவாச சேகர் (ஊராட்சி), குருராஜன் (பேரூராட்சிகள்), நகராட்சி ஆணையர் சித்ரா சுகுமார் ஆகியோர் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.