நல்லம்பள்ளி ஆட்டுச் சந்தையில் விற்பனை மந்தம்: வியாபாரிகள் கவலை..!

“மழையால் வியாபாரிகள் அதிகளவில் சந்தைக்கு வரவில்லை. விலைவாசி உயர்வால் பொதுமக்களிடம் வாங்கும் சக்தி குறைந்து விட்டது. - வியாபாரிகள்”

Update: 2021-07-20 08:45 GMT

தருமபுரி பிரபல நல்லம்பள்ளி ஆட்டுச் சந்தையில் பக்ரீத் பண்டிகை மற்றும் ஆடி18 பண்டிகையை முன்னிட்டு ஆடு விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு நடைபெறவில்லை என வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதியில் வார வாரம் செவ்வாய் கிழமையில் சந்தை நடைபெறுவது வழக்கம் . இந்த சந்தைக்கு தருமபுரி சுற்றுப்புறங்களில் உள்ள பாப்பாரப்பட்டி, பென்னாகரம், பாலக்கோடு, வெள்ளிச்சந்தை, தொப்பூர், போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து மற்றும் பக்கத்து மாவட்டமான மேச்சேரி, மேட்டூர் ,எடப்பாடி, கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை, பக்கத்து மாநிலங்களான ஆந்திராவில் இருந்து ஏராளமான ஆடுகள், கோழிகள் போன்றவைகள் விற்பனைக்காக வரும்.

அதேபோல் வாங்குவதற்காக தருமபுரி மட்டுமல்லாமல் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்து வாங்கிச் செல்வது வழக்கம். இந்நிலையில் வரும் 21ம் தேதி பக்ரீத் மற்றும் ஆடி 18 திருவிழா வருவதால் இன்று அதிக அளவில் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மூலம் சந்தைக்கு கொண்டுவரப்பட்டது.

கொண்டுவரப்பட்ட ஆடுகளை வாங்குவதற்கு இஸ்லாமியர்களும், இந்துக்களும் அதிக அளவில் . வாங்குவார்கள் என வியாபாரிகள் விவசாயிகள் கொண்டு வந்து இருந்தனர். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு ஆடுகள் விற்பனையாகவில்லை. ஆயிரம் ஆடுகள் மட்டுமே விற்பனையாகி உள்ளது. இதனால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், 'மழையால் வியாபாரிகள் அதிகளவில் சந்தைக்கு வரவில்லை. விலைவாசி உயர்வால் பொதுமக்களிடம் வாங்கும் சக்தி குறைந்து விட்டது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் குர்பானி கொடுப்பார்கள். இந்த ஆண்டு வியாபாரம் குறைவாக உள்ளது. பண்டிகை காலங்களில் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் ஆடுகள் விற்பனையாகும். தற்போது ஆயிரம் ஆடுகள் மட்டுமே விற்பனையாகி உள்ளது. வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்' என்றார்.

Tags:    

Similar News