அமைச்சர்கள் செயல்பாடு 24ம் புலிகேசியை நினைவுபடுத்துகிறது: டிடிவி தினகரன்
முதல்வர், அமைச்சர்கள் செயல்பாடு 24 ம் புலிகேசியை நினைவு படுத்துவதாக தர்மபுரியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி
தர்மபுரியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் இல்ல நிகழ்ச்சிகளில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொள்ள தருமபுரிக்கு வருகை தந்தார்.
பின்னர் தர்மபுரியில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் கூறுகையில், அதிமுக, அமமுக இணைப்பை பொறுத்தவரை, அம்மாவின் வழியில் ஆட்சி அமைப்பது தான் எங்களுடைய ஒரே குறிக்கோளாக லட்சியமாக செயல்பட்டு தமிழகத்தில் மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைப்போம் என கூறினார்
தமிழகத்தில் திமுக ஆட்சி பற்றி குறிப்பிட்ட அவர், 24ம் புலிகேசி கதை போல தமிழகத்தில் திமுக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடு உள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை சொத்து வரி 150 சதவீதம் உயர்வு போன்றவற்றால் திமுக தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் வாக்களித்த மக்களுக்கு திமுக தண்டனை வழங்கி உள்ளதாக அவர் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் துபாய் பயணம் குறித்து தெரிவித்த அவர் அவரது பயணத்தின் நோக்கம் குறித்து விரைவில் உண்மை தெரியவரும் என அவர் தெரிவித்தார்.
இரட்டை இலை வழக்கு குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர் சம்மன் வரவில்லை வந்தால் இந்த வழக்கினை நான் நிச்சயம் சந்திப்பேன் என தெரிவித்தார்.
பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என தெரிவித்த அவர் மாநிலங்கள் வரியை குறைத்தால் பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்தார் இலங்கை பொருளாதார நிலை குறித்து தெரிவித்த அவர் இந்தியாவிற்கு அந்த நிலை ஏற்படாது இங்குள்ள நிலை வேறு அங்குள்ள நிலை வேறு என தெரிவித்தார்
மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசு பற்றி குறிப்பிட்ட அவர் தமிழக மக்களுக்கு ஆதரவாக தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் குரல் கொடுத்து வருவதாகவும் மேகதாது அணை கட்டும் விஷயத்தில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் கட்சி பாகுபாடு இன்றி தமிழகத்தில் தமிழகத்தின் நலனுக்காக அனைவரும் இணைந்து மேகதாது அணை கட்டுவதை எதிர்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பேட்டியின்போது தர்மபுரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் டி.கே. ராஜேந்திரன், அமமுக அமைப்புச் செயலாளர் அரூர் ஆர் .ஆர்.முருகன் சேலம் மாவட்ட கழக செயலாளர் எஸ். கே. செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.