துணிச்சல் இருந்தால் பாஜகவினர் சாதியை ஒழிக்கட்டும்: திருமுருகன் காந்தி

கட்டாய மத மாற்றத் தடைச் சட்டத்தை கேட்கும் பாஜகவினர், துணிச்சல் இருந்தால் சாதியை ஒழிக்கட்டும் பார்ப்போம் என திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.

Update: 2022-01-22 15:00 GMT

தருமபுரியில் மே 17 இயக்க நிர்வாகி மகாலிங்கம் படத்தை, அதன் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கலந்துகொண்டு திறந்து வைத்தார்.

தருமபுரியில் மே 17 இயக்க நிர்வாகி மகாலிங்கம் படத் திறப்பு நிகழ்ச்சியில், அதன் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கலந்துகொண்டு படத்தை திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருமுருகன் காந்தி, நீட் தேர்வு உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். இது தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கை. இது ஜனநாயக கோரிக்கை சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மறுப்பதற்கும், எதிர்ப்பதற்கும், திருப்பி அனுப்புவதற்கான உரிமை இந்த அரசியல் சாசனத்திற்கும், ஆளுனருக்கும் மற்றவர்களுக்கும் கிடையாது.

அனைத்து ஜனநாயக சக்திகளும் இந்த நீட் தேர்வு வேண்டாம் என தொடர்ச்சியாக போராடிக்கொண்டு வருகிறோம். இந்திய அரசு உருவாக்கிய சின்னங்கள் இந்த நாட்டினுடைய பாதுகாப்பிற்காக, அமைதிக்காக நம் நாட்டின் மீது ஏற்பட்ட அச்சுறுத்தல்கள், உயிர் நீத்த போர் வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சுடரை அணைப்பது என்பது ஏற்றுக் கொள்ள முடியாது.

இது நாகரிகமான செயல் அல்ல. இது ராணுவ வீரர்களின் தியாகத்தை அவமதிக்க கூடிய செயல். நாங்கள் தேசபக்தர்கள் என சொல்லக் கூடிய மோடி அரசு, இதுபோன்ற விரோதமான செயல்களை தொடர்ந்து செய்து வருகிறது.

இது போன்ற நினைவுச் சின்னங்களை அழிப்பதன் மூலம் வரலாற்றை மறைக்க முடியாது, மாற்றி அமைக்க முடியாது, திருத்தி விட முடியாது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் குறிப்பாக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியதில் இந்துத்துவ சக்திகளுக்கு எந்த பங்களிப்பும் இல்லை. அவர்கள் ஆங்கிலேயர்களுக்கு துணையாக தான் இருந்தார்கள் என்பது வரலாறு. ஆகவே இதனை மறைக்கின்ற வகையில் இதுபோன்ற சின்னங்களை அவர்கள் மறைப்பது, மாற்றி அமைப்பது போன்ற செயல்களை செய்து வருகின்றனர்.

கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என பாரதிய ஜனதாவினர் தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஒருவர் எந்த மதத்தை வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம் என்பது அரசியல் சாசனத்தில் உள்ளது. இதனை சட்டத்தின் வழியாக தடை செய்ய முடியாது. வேண்டுமென்றால் முதலில் சாதியை தடை செய்ய சொல்லுங்கள், அதற்கான துணிச்சல் பாரதிய ஜனதா கட்சிக்கு இருக்கிறதா என்று பார்ப்போம். அவ்வாறு தடை செய்துவிட்டால், இது போன்ற கோரிக்கைகள் குறித்து விவாதிப்பது சாத்தியமாகும்.

இட ஒதிக்கீட்டை நாங்கள் எதிர்க்கிறோம் என்று பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலின மக்களின் உரிமைகளை மறுக்கும் பாரதிய ஜனதா கட்சி. இப்பொழுது கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வருவோம் என்பது சனாதானத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கம் தானே தவிர, வேறு ஒன்றும் இல்லை. இதுபோன்ற ஜனநாயக விரோத கோரிக்கைகளுக்கு தமிழகத்தில் இடமில்லை என திருமுருகன் காந்தி தெரிவித்தார்.

Tags:    

Similar News