'ஜெய்பீம்' படத்தில் சரஸ்வதி படத்தை எடுக்கவில்லை என்றால்.. எச்.ராஜா பேட்டி

திமுக தவறுகளை திருத்திக் கொண்டு மக்கள் பணியாற்ற வேண்டும் என தருமபுரியில் பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.

Update: 2021-11-26 16:00 GMT

தர்மபுரியில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. மூத்த தலைவர் ஹெச். ராஜா.

தருமபுரியில் பாரதிய ஜனதா கட்சியினருக்கான பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சி இன்று (26-ம் தேதி) தொடங்கி மூன்று நாட்கள் நடக்கிறது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேச, கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், மூத்த தலைவர்களில் ஒருவரான ஹெச். ராஜா கலந்து கொண்டு பேசினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா, கடந்த 25 நாட்களுக்கு மேலாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகள் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்களும் விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவராக தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் இருந்தபோது வெள்ள பாதிப்பால் ஒரு ஏக்கர் விவசாய நிலத்திற்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். ஆனால் தற்போது முதலமைச்சர் ஆக உள்ள ஸ்டாலின் ஒரு ஹெக்டேருக்கு 20 ஆயிரம் மட்டுமே அறிவித்துள்ளார்.

பாஜக தொடர்ந்து வெள்ள பாதிப்பால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் தமிழக அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறது.

வெள்ள நீரால் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் பாதிப்பு அடைந்து இருந்தால், அவர்களுக்கு நிவாரணமாக ரூபாய் 5 ஆயிரம் வழங்க வேண்டும். அரசியல், பொதுவாழ்வு, தனிமனிதம் இவை அனைத்திலுமே ஒழுக்கம் தேவை.

சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நீர் வழி பாதைகளை ஆக்கிரமித்து அரசு கட்டிடங்கள், நீதிமன்றக் கட்டடங்கள் மற்றும் தனியார் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நீர்நிலைகள் பாதுகாப்பு குறித்த ஒழுக்க நெறி முறைகளை வகுக்க வேண்டும். தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு முடிவு கட்டாமல் இதுபோன்ற நெறி முறைகளை வகுக்க முடியாது. கடந்த ஆறு மாதத்தில் கழிவுநீர் கால்வாய்களை கூட சரி செய்ய முடியவில்லை. திமுக ஆட்சிக்கு வந்து ஆறுமாதம் ஆகவில்லை, 54 ஆண்டுகள் ஆகிறது. இந்த ஆட்சியாளர்கள் தவறுகளைத் திருத்திக் கொண்டு, நல்ல முறையில் மக்கள் பணியாற்ற வேண்டும்.

ஜெய் பீம் படம், வன்னியர், பட்டியலின சமூக மக்களிடையே மோதலை ஏற்படுத்த வேண்டும். சாதீய மோதல்களை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ளது. ஏன் படத்தில் அக்னி குண்டத்தை வைக்க வேண்டும். லட்சுமி படத்தை ஏன் வைக்க வேண்டும். ஜெய்பீம் படத்தில் சரஸ்வதி படத்தை எடுக்கவில்லை என்றால், இது மிகப்பெரிய பிரச்சாரமாக தமிழகம் முழுவதும் எடுத்துச் செல்லப்படும்.

மேலும் யானை வழித்தட பிரச்சினையில் மாவட்ட ஆட்சியர் ராஜினாமா செய்யும் வகையில் நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது என்பது எனது புரிதல் என்றார்.

Tags:    

Similar News