தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடல்: பக்தர்களுக்கு தடை

ஊரடங்கு கட்டுப்பாடு எதிரொலியாக தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டதால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-01-08 05:30 GMT

தர்மபுரி குமாரசாமி பேட்டையில் உள்ள சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் மூடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் ஒமிக்ரான் வைரஸ் தொற்றும் பரவி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து கோவில்களும் நடை சாத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தமிழக அரசு அறிவித்தபடி தர்மபுரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமையான நேற்றும் இன்றும்அனைத்து கோவில்களிலும் நடை சாத்தப்பட்டது. அந்தந்த கோவில்களில் அதிகாலை ஆகம விதிகள் படி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு கோவில் நடை சாத்தப்பட்டது. சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டதால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் வெளியில் இருந்தபடியே சாமி கும்பிட்டுவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பினர்.

தர்மபுரி மாவட்டம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோவில்கள் மற்றும் கிராமங்களில் ஊர் பொதுமக்கள் கட்டு பாட்டில் உள்ள கோவில்கள் அனைத்தும் நேற்று சாத்தப்பட்டிருந்தன. மார்கழி மாதம் என்பதால் பெண்கள் அதிகாலையில் கோவிலுக்கு வந்து வழிபடுவது வழக்கம். அரசின் இந்த திடீர் கட்டுப்பாட்டால் பெண்கள் கோவிலுக்கு வந்து சாமி கும்பிட முடியாமல் திரும்பி சென்றனர்.

தர்மபுரி நகரில் உள்ள குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணி சாமி கோவில் நடை சாத்தப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதேபோல் கோட்டை பரவாசுதேவ பெருமாள் கோவில், மல்லிகார்ஜூன சாமி கோவில், கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில், நெசவாளர் நகர் ஓம் சக்தி மாரியம்மன் கோவில், வேல் முருகன் கோவில், மகாலிங்கேஸ்வரர் கோவில், அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சாமி கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களும் நடை மூடப்பட்டன.

மாவட்டத்தில் முக்கிய கோவில்களான தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், வே.முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோவில், காரிமங்கலம் மலையில் உள்ள அருணேஸ்வரர் கோவில், அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்கள் நேற்று நடை மூடப்பட்டன. இதேபோன்று தேவாலங்கள், மசூதிகள், பள்ளிவாசல்கள் மூடப்பட்டன.

Tags:    

Similar News