50 ஆயிரம் லிட்டர் திரவ உயிர் உரம் உற்பத்தி: வேளாண்மை இணை இயக்குனர்
நடப்பாண்டில், 50 ஆயிரம் லிட்டர் திரவ உயிர் உரங்கள் உற்பத்தி செய்யப்படும் என, வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு உயிர் உர உற்பத்தி மையத்தில், நடப்பாண்டில் புதிய தொழில் நுட்படங்களை கொண்டு 50 ஆயிரம் லிட்டர் திரவ உயிர் உரம் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இது குறித்து, தர்மபுரி வேளாண்மை இணை இயக்குநர் வசந்தரேகா கூறியதாவது:
தர்மபுரி மாவட்டத்தில் மண்ணில், சாம்பல் சத்து பயிர்களுக்கு கிடைக்கும் வகையில், 2 சதவீதம் மட்டுமே உள்ளது. உயிர் உர உற்பத்தி மையத்தில், புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி நடப்பு ஆண்டில் 50,000 லிட்டர் திரவ உயிர் உரம் உற்பத்தி செய்யப இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேளாண் விரிவாக்க மையங்கள் மூலமாக மானியத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது.
பயிருக்கு ஏற்ற உரத் தேவைகளை உயிர் உரங்களின் மூலம் வழங்குவதால், ரசாயன உரச்செலவு 25 சதவீதம் குறைகிறது. நிலங்கள் மாசுப்படுவதில் இருந்து பாதுகாக்கப்படுகிறது.இரண்டாம் போக சாகுபடி செய்யவுள்ள உளுந்து, பச்சைபயறு, எள், பருத்தி போன்ற பயிர்களுக்கு விதை நேர்த்தி செய்ய, 50 மி.லி., திரவ உயிர் உரம் ஒரு ஏக்கருக்கு தேவையான விதையுடன் கலந்து பயன்படுத்தலாம்.
500.மி.லி., திரவ உயிர் உரங்களின் விலை ரூ.150 ஆகும். ஒரு எக்டேருக்கு 500 மி.லி., போதுமானது. பயிர்களுக்கும் திரவ உயிர் உரங்களை பயன்படுத்தி விவசாயிகள் அதிக லாபம் பெறலாம் என வேளாண்மை இணை இயக்குனர் வசந்தரேகா தெரிவித்தார்.