பிரதமர் தலைமையில் ஆலோசனை கூட்டம்; ஸ்டாலின், இபிஎஸ் இன்று டெல்லி பயணம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஜி 20 மாநாடு ஏற்பாடுகள் குறித்து நடக்கும் ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தமிழக முதல்வர் ஸ்டாலின், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று டெல்லி செல்கின்றனர்.

Update: 2022-12-05 03:10 GMT

வரும் 2023ல், இந்தியாவில் ஜி20 மாநாடு நடைபெற உள்ளது. ( கோப்பு படம்)

ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. அடுத்த ஆண்டு ஜி-20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக அனைத்துக் கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

உலகின் முன்னணி 20 நாடுகளின் மிக முக்கிய கூட்டமைப்பாக ஜி 20 கூட்டமைப்பு உள்ளது. இந்த அமைப்பில் இந்தியா, இந்தோனேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, அர்ஜென்டினா, பிரேசில், சீனா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், ரஷ்யா, தென்ஆப்பிரிக்கா, துருக்கி, தென்கொரியா, இத்தாலி, மெக்சிகோ, சவுதி அரேபியா, பிரான்ஸ், ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட 20 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

ஜி 20 நாடுகளின் அமைப்பின் தலைமை பொறுப்பை ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடு சுழற்சி முறையில் வகித்து வருகிறது. அந்த வகையில் வரும் டிசம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் வரை ஜி 20 நாடுகளின் தலைமை பொறுப்பு இந்தியா வசம் வருகிறது. உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) யில் 85 சதவிகிதம் இந்த நாடுகளுக்கு சொந்தமானதாக உள்ளதால், ஜி 20 கூட்டமைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

அதேபோல், உலகில் வசிக்கும் மொத்த மக்கள் தொகையில் 65 சதவிகிதம் இந்த 20 நாடுகளுடையது தான். எனவே இந்த ஜி 20 கூட்டமைப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்தியா தலைமையில் இந்த கூட்டமைப்பு செயல்பட உள்ள நிலையில், 200 மாநாடுகளை கூட்ட இந்தியா திட்டமிட்டுள்ளது. இதில் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாடும் அடங்கும்.

மத்திய அரசு, 32 பிரிவுகளில் நாடு முழுவதும்  200 கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது. எல்லா மாநிலங்களிலும் இந்த கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. தமிழகத்தில் சென்னையில் ஜி-20 கூட்டம் நடைபெறும் என்று தெரிய வந்துள்ளது. இதற்கிடையே, தலைநகர் டெல்லியில் இன்று இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில், 40 க்கும் மேற்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜி-20 ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பேன் என்று மேற்கு வங்காள முதல்வர் முதல் நபராக அறிவித்தார். இந்நிலையில், ஜி-20 ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார். ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று விட்டு இரவே முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை திரும்ப உள்ளார்.

அதேபோல், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கும், டெல்லியில் இன்று நடக்கும் ஜி ௨௦ மாநாடு குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க, மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதையடுத்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளான இன்று, சென்னை மெரினா கடற்கரையில் ஜெ., நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு, எடப்பாடி பழனிசாமி, விமானம் மூலம் டெல்லிக்கு பயணம் செய்ய உள்ளார்.

Similar News