டெலிவரி ஊழியரை தாக்கிய காவலர் மீது நடவடிக்கை: பொதுமக்கள் சபாஷ்

உணவு டெலிவரி ஊழியரை தாக்கிய போக்குவரத்து காவலர் சதீசை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

Update: 2022-06-05 05:53 GMT

கோவையில் உணவு டெலிவரி ஊழியரை தாக்கும் போக்குவரத்து காவலர் சதீஸ்

கோவை நீலம்பூர் பகுதியை சேர்ந்த மோகனசுந்தரம் தனியார் உணவு டெலிவரி அலுவலகத்தில் டெலிவரி பாயாக பணியாற்றுகிறார். இவர், ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ப்ரூக் பாண்ட் சாலையில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, அவ்வழியே சென்ற பெண் ஒருவர் மீது தனியார் பள்ளி வாகனம் இடித்து விட்டு வேகமாக சென்றுள்ளது. அதனை பார்த்து பதறி போன டெலிவரி பாய் மோகன சுந்தரம் பள்ளி வேனை மடக்கி தட்டிகேட்டுள்ளார்.

இதனால் இந்த ஊழியரை போக்குவரத்து காவலர் சதீஸ் சாலை ஓரத்தில் நிற்கவைத்து கன்னத்தில் பலமாக தாக்கியுள்ளார். இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதனை பார்த்த சமூக அலுவலர்கள் போக்குவரத்து காவலருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் போக்குவரத்து காவலர் சதீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, ஊழியர் மோகனசுந்தரம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்தார். மேலும் தனியார் பள்ளி வாகனம் ஒன்று சாலையில் நின்று கொண்டிருந்த பெண்மணி மீது இடித்து விபத்து ஏற்படுத்தியது எனவும், அந்த பள்ளி வாகனத்தை விரட்டிச் சென்று தட்டிக்கேட்க தான் சென்றதாகவும் இதனைக் கண்ட போக்குவரத்து காவலர், தன்னை சரமாரியாக தாக்கி கன்னத்தில் அறைந்ததாகவும் மோகனசுந்தரம் தெரிவித்தார்.

மேலும் விபத்து ஏற்படுத்திய அந்த தனியார் பள்ளி வாகன ஓட்டுநரை கண்டுகொள்ளாமல் அந்த வாகனத்தை போக்குவரத்து காவல் அதிகாரி அனுப்பி வைத்ததாகவும் அவர் புகார் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து உணவு டெலிவரி ஊழியர் மோகனசுந்தரம் அளித்த புகாரின் பேரில் காவலர் சதீஸ் மீது பீளமேடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து காவலர் சதீஸ் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கோவை மண்டல காவல்துறை டி.ஐ.ஜி முத்துசாமி உள்ளிட்ட உயரதிகாரிகள் கவனத்திற்கு சென்ற இந்த விவகாரத்தில் உயரதிகாரிகள் உடனடி நடவடிக்கைக்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் சபாஸ் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News