கோவையில் அட்சய திருதியை முன்னிட்டு நகை வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்

கோவையிலும் ஏராளமான பொதுமக்கள் தங்க நகைகள் வாங்குவதில் ஆர்வம் காட்டினர்.

Update: 2024-05-10 05:38 GMT

கோவையில் உள்ள ஒரு நகை கடையில் நகை வாங்க குவிந்த மக்கள் கூட்டம் .

அட்சய திருதியை நாளில் நகை, மஞ்சள், கல் உப்பு ஆகியவற்றை வாங்கி வீட்டில் வைத்தால் வாழ்வில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். எனவே இந்நாளில் பெரும்பாலான மக்கள் தங்கம் வெள்ளி வைர நகைகளை வாங்குவர். இதன் காரணமாக அட்சய திருதியை அன்று அதிகளவில் நகை வியாபாரம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருட அட்சய திருதியை நாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு பெரும்பாலான மக்கள் நகைகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவையிலும் ஏராளமான பொதுமக்கள் தங்க நகைகள் வாங்குவதில் ஆர்வம் காட்டினர்.

கோவை மாநகரில் ஒப்பணக்கார வீதி, டவுன்ஹால், காந்திபுரம், கிராஸ்கட் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நகை கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. காலை முதலே அதிக அளவிலான மக்கள் தங்க நகைகள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். அட்சய திருதியை நாளை முன்னிட்டு அனைத்து நகை கடைகளிலும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து கடைகளிலும் புதுபுது டிசைன்களில் நகைகள் புதுவரவாக வந்துள்ளன.

இதன் காரணமாக பொதுமக்கள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாகவே காணப்படுகிறது. அதே சமயம் பள்ளிகளுக்கும் விடுமுறை என்பதால் அனைவரும் குழந்தைகள் உடன் வந்து குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் நகைகளை வாங்கி செல்கின்றனர். இதனால் அனைத்து நகைக் கடைகளிலும் நகை வாங்க கூட்டம் அலைமோதி வருகிறது. இன்று நகை வியாபாரம் அதிக அளவில் இருக்கும் என்பதாலும், அதிக கூட்டம் வரும் என்பதாலும் அதற்கேற்ப பல்வேறு முன்னேற்பாடுகளை நகை கடைகள் செய்துள்ளன.

Tags:    

Similar News