பல கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை போலி ஆவணம் மூலம் விற்க முயன்ற கும்பல் கைது
சென்னையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை போலி ஆவணம் மூலம் விற்க முயன்ற கும்பலை போலீசார் கைது செய்தனர்.;
பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்ய முயன்றவர்களை கிண்டி போலீசார் கைது செய்தனர்.
சென்னை வடபழனி, எம்.ஜி.ஆர்.,நகரை சேர்ந்தவர் கதிரேசன்(52), இவர், கோகுலம் எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார்.
திருவான்மியூர், வால்மிகி நகரில் உள்ள, விமலாபாரதி என்பவருக்கு, 37 கிரவுண்ட் இடம் உள்ளது. இந்த இடத்தை, அம்பத்துாரை சேர்ந்த அமலாபாப்பாத்தி, ராஜேந்திரா மற்றும் திருச்சி மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகியான அருள்ஜோதி ஆகியோர் சேர்ந்து, 40 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய, கதிரேசனிடம் விலை பேசி உள்ளனர்.
கடந்த மாதம், 24ம் தேதி, கிண்டியில் வைத்து, அட்வான்ஸ் ஆக, 5 லட்சம் ரூபாய் கதிரேசன் கொடுத்துள்ளார். ஆவணங்களை சட்டப்படி சரிபார்த்தபோது, அவை போலி ஆவணங்கள் என தெரிந்தது.
மோசடி நபர்களை போலீசில் ஒப்படைக்க, கதிரேசன் முடிவு செய்தார்.
நேற்று, மீதி பணத்தை தருவதாகவும், ஆவணப்பதிவு செய்ய வேண்டும் எனவும் கூறி, வடபழனி வர அழைத்தார்.
அமலாபாப்பாத்தி(78), ராஜேந்திரமல்(64), அருள்ஜோதி(65), மற்றும் போலி ஆவணம் தாயாரித்த தண்டையார்பேட்டையை சேர்ந்த குர்கோஸ் மேத்யூ(59), ராமதாஸ்(63), மூர்த்தி(35), ஹரிபிரசாத்(38), ஆகியோர் சென்றனர்.
ஏழு பேரையும், வடபழனி காவல் நிலையத்தில் ஒப்படைத்து, நடந்த சம்பவங்களை கூறினர். ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்த இடம், கிண்டி என்பதால், கிண்டி போலீசில் அவர்களை ஒப்படைத்தனர்.
கிண்டி போலீசார் பெண் உட்பட 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.