பைப்லைன் உடைந்து சாலையில் வீணாகும் குடிநீர். அதிகாரிகள் அலட்சியம்

சாலை விரிவாக்க பணியின்போது பைப்லைன் உடைந்து கூடுவாஞ்சேரி-நெல்லிக்குப்பம் சாலையில் வீணாகும் குடிநீர்

Update: 2021-04-09 02:30 GMT

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தொடங்கி செங்கல்பட்டு-திருப்போரூர் சாலையில் இணையும் 18 கிலோ மீட்டர் கொண்ட கூடுவாஞ்சேரி-கொட்டமேடு சாலையை 4 வழி சாலையாக மாற்றுவதற்கு பல கோடி மதிப்பில் கடந்த ஆறு மாதங்களாக சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. நெடுஞ்சாலை துறையின் அலட்சிய போக்கால் சாலை விரிவாக்க பணியின்போது பைப்லைனில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்டுகொள்ளாத அதிகாரிகளால் கூடுவாஞ்சேரி-நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள பைப் லைனில் குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், சென்னையை ஒட்டியபடி உள்ள நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இதில், பெருமாட்டுநல்லூர் ஏரியில் நான்கு கிணறுகள் அமைக்கப்பட்டு அங்கிருந்து நந்திவரம்- கூடுவாஞ்சேரி பேரூராட்சி மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக. கூடுவாஞ்சேரி-நெல்லிக்குப்பம் சாலையோரத்தில் பைப்லைன் அமைக்கப்பட்டு அதன் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சாலையை விரிவாக்கம் செய்வதற்காக சாலையின் இரண்டு பக்கத்திலும் பள்ளம் தோண்டப்பட்டது அப்போது ஆங்காங்கே பைப்லைன் உடைப்பு ஏற்பட்டது. இதனை சரி செய்யாமல் நெடுஞ்சாலைத்துறையினர் சாலை அமைத்துவிட்டனர். இதனால் நந்திவரம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரிலும், இதேபோல் பல்வேறு இடங்களில் பைப் லைன் உடைப்பு ஏற்பட்டதில் தினந்தோறும் குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது. இதனால் மக்கள் சரிவர குடிநீர் கிடைக்காமல் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினரிடம் கேட்டதற்கு, நாங்கள் சாலை சீரமைப்பதற்கு முன்பே சம்பந்தபட்ட பேரூராட்சி நிர்வாகத்திடம் கடிதம் கொடுத்துவிட்டோம். ஆனால் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்காததால் நாங்கள் சாலையை அமைத்து விட்டோம் என்றனர்.

இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசிடம் கேட்டதற்கு, நெடுஞ்சாலைத்துறை சார்பில் அது போன்ற கடிதம் எதுவும் எங்களுக்கு கொடுக்கவில்லை. எந்தவொரு முன்னறிவிப்பும் செய்யாமல் பைப்லைன் உடைத்து நாசப்படுத்தி பொதுமக்களுக்கு கொடுக்க வேண்டிய குடிநீர் வீணாகி வருகிறது. இதுகுறித்து நெடுஞ்சாலை துறையினர் மீது சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளோம் என்றனர்.


Tags:    

Similar News