புறநகர் ரயிலில் இன்று முதல் பொது மக்களுக்கு அனுமதி, மகிழ்ச்சியுடன் பயணம்
புறநகர் ரயிலில் இன்று முதல் பொதுமக்கள் பயணம் செய்யலாம் என்று தென்னக ரயில்வே அனுமதி வழங்கியது. காலை முதல் மக்கள் மகிழ்ச்சியாக ரயிலில் பயணம் செய்து வருகின்றனர்.
இன்று முதல் புறநகர் ரயில்களில் கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் பயணிக்கலாம் எனத் தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது. இதனை தொடர்ந்து காலை முதல் ஆர்வத்துடன் பயணிகள் தங்கள் பயணத்தை துவக்கியுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மெல்ல மெல்லக் குறைந்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்துவருவதால், பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது.இதனிடையே, கடந்த 7-ம் தேதி முதல் 208 ஆக இருந்த மின்சார ரயில் சேவையின் எண்ணிக்கை 279 ஆக அதிகரிக்கப்பட்டது. பின்னர், 14-ம் தேதி முதல் இந்த எண்ணிக்கை 323 ஆக அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை புறநகர் ரயில்களில் மத்திய, மாநில அரசுப் பணியாளர்கள், நீதிமன்றப் பணியாளர்கள், அத்தியாவசியப் பணியாளர்கள் மட்டுமே பயணிக்க அனுமதி இருந்தது. இன்று முதல் பொதுமக்கள் கொரோனா கட்டுப்பாடு விதிகளைப் பின்பற்றிப் பயணிக்கலாம் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தொலைதூரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு ஒருவழிப் பயணம் மட்டுமே மேற்கொள்வதற்கான அனுமதிச் சீட்டு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், பெண்கள், பெண்களுடன் பயணிக்கக்கூடிய 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் எப்போது வேண்டுமானாலும் பயணிக்கலாம் எனவும், ஆண்கள் 'பீக் ஹவர்ஸ்' எனப்படும் முக்கிய நேரத்தைத் தவிர்த்து அதாவது காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும்,
பின்னர் இரவு 7 மணி முதல் கடைசி நேரம் வரையிலும் பயணிக்கலாம் என்றும், ரயில்கள் இயக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் பயணிகள் ஆர்வத்துடனுன் மகிழ்ச்சியுடனும் இரயில்களில் பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.