திருவண்ணாமலையில் சிறப்பு தனியார் வேலை வாய்ப்பு முகாம்

திருவண்ணாமலையில் சிறப்பு தனியார் வேலை வாய்ப்பு முகாம்

தனியார் வேலைவாய்ப்பு முகாம் விழிப்புணர்வு வாகனத்தை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்.

திருவண்ணாமலையில் 17ஆம் தேதி சிறப்பு தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

திருவண்ணாமலையில் பிப்ரவரி 17-ஆம் தேதி நடைபெறும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கான ஆட்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா் என்று மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சாா்பில், கலைஞா் கருணாநிதி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை (பிப்.17) காலை 9 மணி முதல் மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்குத் தேவையான தகுதிகள் கொண்ட இளைஞா்களை தோ்வு செய்ய திட்டமிட்டுள்ளது.

இத்துடன், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்துக்கு பதிவு செய்வது தொடா்பான வழிகாட்டுதல்கள், இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்கான பதிவுகளும் இந்த முகாமில் நடைபெறுகிறது. இதுதொடா்பான விழிப்புணா்வு பிரசார ரதத்தின் தொடக்க விழா மற்றும் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் யோகலட்சுமி தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் பிரியதா்ஷினி முன்னிலை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு விழிப்புணா்வு பிரசார ரதத்தை தொடங்கிவைத்து, பொதுமக்கள் மற்றும் இளைஞா்களிடம் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா். பின்னா், ஆட்சியா் கூறியதாவது:

திருவண்ணாமலையில் பிப்ரவரி 17ஆம் தேதி நடைபெறும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான தகுதிகள் கொண்ட ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வை நடத்துகின்றனர்.

இந்த முகாமில் ஆண் பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம். இதற்கான கல்வி தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ, டிப்ளமோ பன்னிரண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு என அனைவரும் கலந்து கொள்ளலாம்.

முகாமில் கலந்துகொள்ள விரும்புவோா் விழிப்புணா்வு வாகனத்தில் உள்ள க்யூஆா் கோடை ஸ்கேன் செய்து பதிவு செய்யலாம். மேலும், தங்களது புகைப்படம், கல்விச் சான்றிதழ்கள், ஆதாா் அடையாள அட்டை மற்றும் சுய விவரக் குறிப்புகளுடன் முகாமுக்கு நேரில் வந்து கலந்து கொள்ளலாம். முன்னதாக, இணைய தளத்தில் தங்களது விவரங்களைப் பதிவு செய்தபிறகும் முகாமுக்கு நேரில் வரலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிநெறி வழிகாட்டும் மையத்தை 04175-233381 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.

Tags

Next Story