தஞ்சாவூரில் பெற்ற தாயை பரிதவிக்கவிட்ட இரண்டு மகன்களை காவல்துறை கைது
தஞ்சாவூரில் பெற்ற தாயை பரிதவிக்க விட்ட 2 மகன்களை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்
HIGHLIGHTS
தஞ்சாவூரில், பெற்ற தாயை பராமரிக்காமல் வீட்டுக்குள் பூட்டி வைத்த இரண்டு மகன்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
தஞ்சாவூர், காவிரி நகர் 5வது தெருவைச் சேர்ந்தவர் ஞானஜோதி(62;). துார்தர்ஷனில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற இவரது கணவர் திருஞானம் 10 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். ஞானஜோதியின் மூத்த மகன் சண்முகசுந்தரம், சென்னையில் போலீஸ் தொழில்நுட்ப பிரிவு இன்ஸ்பெக்டராகவும், இளைய மகன் வெங்கடேசன் துார்தர்ஷன் சேனலிலும் பணியாற்றி வருகின்றனர். சொத்து பிரச்னை காரணமாக, இரண்டு மகன்களும் ஞானஜோதியை ஒரு வீட்டில் வைத்து பூட்டி வைத்திருந்தனர்.
போதிய உணவு, தண்ணீர் இல்லாமல், எலும்பும், தோலுமாக மாறிய ஞானஜோதி, வீட்டுக்குள் தரையை சுரண்டி மண்ணை தின்று வந்துள்ளார். இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு, 'வாட்ஸ் ஆப்' பில் புகார் அனுப்பினார். இதையடுத்து, 14ம் தேதி இரவு சமூக நலத்துறை அலுவலர்கள், ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி விமலா ஆகியோர் ஞானஜோதியை மீட்டனர்.
இது தொடர்பாக தமிழ் பல்கலைகழக போலீசில், விமலா புகார் அளித்தார். இதன் பேரில், மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டத்தின் கீழ், பெற்ற தாயினை பராமரிக்காமல் இருந்த இரண்டு மகன்களின் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். இதனையடுத்து இருவருக்கும் நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.