சிவகங்கையில் புத்தகத் திருவிழா: ஆட்சியரிடம் ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கல்
ஊராட்சித் தலைவர்களின் கூட்டமைப்புகள் சார்பாக ரூ.1 இலட்சத்திற்கான காசோலையினை நன்கொடையாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்
HIGHLIGHTS
மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 39 கிராமங்களைச் சார்ந்த ஊராட்சித் தலைவர்களின் கூட்டமைப்புகள் சார்பாக ரூ.1 இலட்சத்திற்கான காசோலையினை நன்கொடையாக மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டியிடம் வழங்கினர்
சிவகங்கை புத்தகத்திருவிழா மன்னர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 15.04.2022 அன்று அமைச்சர் பெருமக்களால் துவக்கி வைக்கப்பட்டு, இன்று (24.04.2022) 10-வது நாளாக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இப்புத்தகத்திருவிழாவில் 10-ஆம் நாள் நிகழ்ச்சியாக இன்றையதினம் பெருந்திரள் வாசிப்பு, பல்வேறு கலைநிகழ்ச்சிகள், நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், திறமைமிக்க பேச்சாளர்களைக் கொண்ட கருத்துரை நிகழ்ச்சிகள் ஆகியவைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
கிராமப்புறங்களைச் சார்ந்த இளைஞர்களின் எதிர்காலத்திற்கு உறுதுணையாகவும், போட்டித் தேர்வுகளை எளிதில் எதிர்கொள்வதற்கும், முதியவர்களின் மன அமைதியை சீராக வைத்துக் கொள்வதற்கும் புத்தகங்கள் மற்றும் நூலகங்கள் அடிப்படையாக அமைகிறது. இது குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு, மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சி மன்றத்தலைவர்கள் சிவகங்கை இப்புத்தகத்திருவிழா குறித்து எடுத்துரைத்து, தங்களது ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்களை இப்புத்தகத் திருவிழாவில் பங்குபெறச் செய்து வருகின்றனர்.
மேலும், இப்புத்தகத்திருவிழாவில் கலந்து கொள்ளும் தன்னார்வலர்கள் தாங்கள் விரும்பும் புத்தகங்களை வாங்கி, அப்புத்தகங்களை தங்களுக்கு விருப்பமுள்ள நூலகங்களுக்கு வழங்கிடும் நடவடிக்கையும் மேற்கொண்டு வருகின்றனர்.
புத்தகத்திருவிழாவின் 10-ஆம் நாள் நிகழ்ச்சியின் போது, மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 39 கிராமங்களைச் சார்ந்த ஊராட்சித்தலைவர்களின் கூட்டமைப்பின் சார்பாக, இப்புத்தகத் திருவிழாவில், தங்களது பங்களிப்பையும் ஏற்படுத்திடும் வகையில் ரூ.1 இலட்சத்திற்கான காசோலையினை நன்கொடையாக மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினர்.
சிவகங்கை மாவட்டத்தில், அனைத்துத்தரப்பு மக்களுக்கும் பயனுள்ள வகையில், நூலகங்களின் உட்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வசதிகளை ஏற்படுத்திட தன்னார்வலர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் முன்வந்து, சிவகங்கையில் நடைபெற்று வரும் புத்தகத்திருவிழாவில் தங்களது பங்களிப்பை ஏற்படுத்தி, சிறப்பாக நடத்திட உறுதுணையாக இருக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி தெரிவித்தார்.
இந் நிகழ்ச்சியில், மானாமதுரை ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் லதா அண்ணாத்துரை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மா.வீரராகவன், மானாமதுரை வட்டார வளர்ச்சி அலுவலர் ரஜினிதேவி மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.