விசா காலவாதியான இலங்கை அகதிகள் தொடர்ந்து தமிழகத்தில் தங்க அனுமதிக்க வேண்டும் : முதல்வருக்கு அகதிகள் கோரிக்கை

விசா காலவாதியான இலங்கை அகதிகள், தொடர்ந்து தமிழகத்தில் வசிக்க அனுமதிக்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி மனு அளிப்பதற்காக, பரமத்தி அகதிகள் முகாமில் வசிப்பவர்கள் நாமக்கல் கலெக்டர் ஆபீசிற்கு வருகை தந்தனர்.
நாமக்கல்,
இது குறித்து, நாமக்கல் மாவட்டம், பரமத்தியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வரும், இலங்கை அகதிகள் நாமக்கல் கலெக்டரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாடு முழுவதும் உள்ள அகதிகள் முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களில், விசா காலாவதியானவர்களை வரும் 10ம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியோறுமாறு போலீசார் கூறியுள்ளனர். இலங்கையில் உள்ளநாட்டுப் போர் நடந்தபோது, அகதிகளாக தப்பி வந்த நாங்கள், நாமக்கல் மாவட்டம் பரமத்தியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில், கடந்த 1990 முதல் 2011 வரை தங்கியிருந்தோம். அதன் பிறகு இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்தவுடன், சிலர் இலங்கைக்கு திரும்பினர். பின்னர், மீண்டும் அங்கு சாதகமற்ற நிலை ஏற்பட்டதால், இலங்கை பாஸ்போர்ட் மற்றும் இந்திய விசாவைப் பெற்று தமிழ்நாட்டிற்கு வந்து இங்கு வசித்து வருகின்றோம்.
நாங்கள் பெற்ற இந்திய விசா ஏற்கனவே காலாவதியாகவிட்டது. இங்கு வசிக்கும் பெரும்பாலோர் தமிழக வம்சாவளியை சேர்ந்தவர்கள், பூர்வீக தமிழ் குடிமக்கள். நாங்கள் தொடர்ந்து இங்கேயே வாழ்ந்து இந்திய குடியுரிமை பெற விரும்புகிறோம். அதற்காக தேவையான ஆவணங்களையும் அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளோம். வருகிற மே 10ம் தேதிக்குள் விசா காலாவதியான அனைவரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று எங்களை போலீசார் வற்புறுத்துகின்றனர். நாங்கள் இலங்கை செல்ல விரும்பவில்லை. எனவே இந்த பிரச்சினையில் தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு, நாங்கள் தொடர்ந்து இங்கேயே தங்குவதற்கும், எங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu