நாகையில் கொரோனா விதிமுறை மீறி தனியார் பள்ளியில் சிறப்பு வகுப்புகள்
கொரோனா விதிமுறை மீறி பிரபல தனியார் பள்ளி 10,11,12 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
HIGHLIGHTS
நாகையில் தமிழக அரசின் கொரோனா விதிமுறைகளை மீறி பிரபல தனியார் பள்ளியில் 10,11,12 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்துள்ள நிலையில் தமிழகத்தில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்குவதற்கும் சிறப்பு வகுப்புகளை நடத்துவதற்கும் தலைமை செயலாளர் தடை விதித்துள்ளார்.
இந்த நிலையில் நாகை அடுத்த காடம்பாடி பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் சி.பி.எஸ்.இ பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் இன்று முதல் தொடங்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நோய் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் 10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது.
கொரோனா அச்சமின்றி மாணவர்கள் பள்ளிக்கு கூட்டம், கூட்டமாக செல்லும் காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைமை செயலாளர் அனைத்து வகை வகுப்புகளுக்கும் ஆன்லைன் கற்பித்தலுக்கு மட்டுமே அனுமதி அளித்துள்ள நிலையில், தமிழக அரசின் விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு சிறப்பு வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.