2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
Gold price rise- இன்னும் 7 ஆண்டுகளில் தங்கத்தின் விலை எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு உச்சத்தை தொட்டிருக்கும் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
HIGHLIGHTS
Gold price rise- கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2024 ஆம் ஆண்டின் காலாண்டில் தங்கம் விலை சுமார் 13% உயர்ந்துள்ளது. இந்த நிலையில் தங்கத்தில் முதலீடு செய்வது சிறந்த தேர்வாக இருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
CNBC-ல் சமீபத்தில் நடைபெற்ற உரையாடலில் பங்கேற்ற விக்னஹர்டா கோல்டு நிறுவனத்தின் தலைவர் மகேந்திர லூனியா, 2030ஆம் ஆண்டுக்குள் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1.68 லட்சத்தை எட்டும் என்று தெரிவித்துள்ளார். அப்படியானால் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.16,800 ஆக இருக்கும். இந்த தகவலை கேட்டு பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
தங்கத்தின் இந்த கடும் விலை உயர்வுக்கு சர்வதேச அரசியலில் நிலவும் பிரச்னைகள் முதல் உலகப் பொருளாதார மந்தநிலை வரை காரணமாக கூறப்படுகிறது. மேலும் பண வீக்கம், தங்கத்தின் தேவை அதிகரிப்பு, தங்கச் சுரங்க உற்பத்தியில் தேக்கம் என பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
பங்குச்சந்தை கணிக்க முடியாததாக உள்ளதால், தங்கம் விலை குறையும் என எதிர்ப்பார்க்க முடியாது. மாறாக தங்கத்தின் விலை உயர்வை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அவற்றில் முதலீடு செய்வது நல்ல தேர்வாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோர் ஆபரண தங்கத்தில் முதலீடு செய்வதை விட தங்கப் பத்திரத் திட்டத்தில் முதலீடு செய்வது சிறந்த தேர்வாக இருக்கும். ஆண்டுக்கு பலமுறை மத்திய அரசு SGB எனப்படும் தங்கப் பத்திரங்களை ஏலம் விடும்.
அதில் நீங்கள் முதலீடு செய்யலாம். நீங்கள் ஒரு தனிநபராக இருந்தால் 4 கிலோ வரை முதலீடு செய்யலாம். இதுவே நீங்கள் அறக்கட்டளைக்கு வாங்க விரும்பினால் 20 கிலோகிராம்கள் வரை வாங்கலாம் என நிபுணர்கள் சொல்கிறார்கள்.