நம்பியூர் அருகே நிலத்தகராறில் இருதரப்பினர் மோதல்: போலீஸ் தம்பதி, திமுக பிரமுகர் உள்பட 8 பேர் மீது வழக்கு
மோதல் (பைல் படம்).
நம்பியூர் அருகே நிலத்தகராறில் இருதரப்பினர் மோதிக் கொண்டது தொடர்பாக, போலீஸ் தம்பதி, திமுக பிரமுகர் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள குருமந்தூர் மேடு பாரதியார் வீதியைச் சேர்ந்தவர் பிரதீப்குமார் (வயது 28). இவர் கடத்தூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிகிறார். அவருடைய மனைவி காயத்ரி (26). இவர் நம்பியூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிகிறார்.
இவர்களது வீட்டின் அருகே குடியிருந்து வருபவர் பழனிச்சாமி. திமுக பிரமுகர். நிலத்தகராறு தொடர்பாக பிரதீப்குமார் தரப்பினருக்கும், பழனிச்சாமி தரப்பினருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இதுதொடர்பாக இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்து இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் கீழே தள்ளி தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து, பிரதீப்குமார் கொடுத்த புகாரின் பேரில் பழனிசாமி, அவருடைய மனைவி புனிதா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதேபோல், பழனிச்சாமி கொடுத்த புகாரின் பேரில் சக்திவேல், கண்ணம்மாள். பிரதீப்குமார், காயத்ரி, பிரவீன், தேவராஜ் ஆகிய 6 பேர் மீது நம்பியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu