ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான தனித்திறன் போட்டி: மாணவ, மாணவிகள் அசத்தல்
![ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான தனித்திறன் போட்டி: மாணவ, மாணவிகள் அசத்தல் ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் மாநில அளவிலான தனித்திறன் போட்டி: மாணவ, மாணவிகள் அசத்தல்](https://www.nativenews.in/h-upload/2025/02/08/1976705-picsart25-02-0815-48-38-908.webp)
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் வாசுதேவன் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கிய போது எடுத்த படம்.
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் நடந்த மாநில அளவிலான தனித்திறன் போட்டியில் மாணவ, மாணவிகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர்.
ஈரோடு கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் நிர்வாக மேலாண்மைத் துறையின் சார்பில், மாநில அளவில் அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான 'மேனோபோலி - 2கே25' என்ற தனித்திறன் போட்டி நேற்று (பிப்ரவரி 7ம் தேதி) நடைபெற்றது.
இந்த போட்டியின் தொடக்க விழாவிற்கு கல்லூரியின் தாளாளர் பி.டி தங்கவேல் முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர் ஹெச்.வாசுதேவன் பல்வேறு கல்லூரிகளில் இருந்து வந்த மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக எம்.சி.ஆர். டெக்ஸ்டைல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எம்.சி.ரிக்சன் கலந்து கொண்டார்.
தொடர்ந்து, அவர் ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வில் எத்தனை தடைகள் வந்தபோதிலும் மனம் தளராமல் மீண்டும் போராடி வெற்றிபெற வேண்டும் என தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களை மாணவ, மாணவிகளுக்கு எடுத்துக்கூறி சிறப்புரையாற்றினார்.
விழாவில், கல்லூரியின் நிர்வாக மேலாண்மைத்துறையின் இணைப் பேராசிரியர் எம். தங்கம் வரவேற்றார். துறைத்தலைவர் கே.பி.கார்த்திகேயன் மாணவ, மாணவிகள் தங்களின் தனித்திறமைகளை எந்த துறையாக இருப்பினும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என கூறினார்.
இதனைத் தொடர்ந்து, மாணவ மாணவிகள் ஆய்வுக் கட்டுரை வழங்குதல், குழு நடனம், தனிநபர் நடனம், மௌன மொழி நடனம், மீம்ஸ், போட்டோகிராஃபி, மெகந்தி, வணிக விளம்பர உத்தி போன்ற பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இப்போட்டிகளில், தமிழகம் முழுவதும் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு ரூபாய் 80,000க்கான பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை கல்லூரி முதல்வர் வாசுதேவன் வழங்கினார்.
விழா முடிவில், கல்லூரியின் நிர்வாக மேலாண்மைத்துறையின் இணைப் பேராசிரியர் ஜி.மஞ்சு நன்றி கூறினார். மேலும், இவ்விழாவை, கொங்கு கலை அறிவியல் கல்லூரியின் நிர்வாக மேலாண்மைத்துறைப் பேராசியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் இணைந்து நடத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu