பெருந்துறை அருகே லாரி மீது தனியார் நிறுவன பேருந்து மோதி விபத்து: 19 பேர் காயம்
விபத்துக்குள்ளான தனியார் நிறுவன பேருந்து.
பெருந்துறை அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது தனியார் நிறுவன பேருந்து மோதிய விபத்தில் 19 பேர் காயமடைந்தனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் தனியார் பிஸ்கட் தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு, பணிபுரியும் தொழிலாளர்கள் தினமும் நிறுவனத்துக்கு சொந்தமான பேருந்தில் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், 25க்கும் மேற்பட்ட தொழிலாளர் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பெருந்துறை சிப்காட் நோக்கி நிறுவனத்தின் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர்.
பேருந்தை மேட்டூரை சேர்ந்த நெல்சன் டேவிட் (வயது 34) என்பவர் ஓட்டினார். பேருந்து பெருந்துறை அருகே காஞ்சிகோவில் பிரிவு சாலையைக் கடந்து சர்வீஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தது.அப்போது, அங்கு சாலையின் வலது ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரியின் மீது எதிர்பாராத விதமாக பேருந்து, மோதியது. இதில் பேருந்தில் இருந்த 19 பேர் லேசான காயம் அடைந்தனர்.
உடனே, அங்கிருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பெரும்பாலானவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டதால் அவர்களில் பலர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். மேலும், இதுகுறித்து, பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu