ஈரோட்டில் மீன் வியாபாரியை ஓட ஓட விரட்டி வெட்டி கொல்ல முயன்ற 4 பேர் கைது
![ஈரோட்டில் மீன் வியாபாரியை ஓட ஓட விரட்டி வெட்டி கொல்ல முயன்ற 4 பேர் கைது ஈரோட்டில் மீன் வியாபாரியை ஓட ஓட விரட்டி வெட்டி கொல்ல முயன்ற 4 பேர் கைது](https://www.nativenews.in/h-upload/2024/02/12/1862076-picsart24-02-1218-04-39-449.webp)
மீன் வியாபாரியை கொலை செய்ய முயன்றதாக கைதான 4 பேர்.
ஈரோட்டில் கள்ளத் தொடர்பை கைவிட மறுத்த மீன் வியாபாரியை அரிவாளால் ஓட ஓட வெட்டி கொலை செய்ய முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஈரோடு மண்டப வீதியை சேர்ந்தவர் சத்திய மூர்த்தி (வயது38). மீன் வியாபாரி. இவர் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவர் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை அன்று கொல்லம்பாளையம் ரயில்வே காலனி மாநகராட்சி பள்ளி அருகே மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வழக்கம்போல் சத்தியமூர்த்தி கொல்லம்பாளையம் பகுதியில் மீன் வியாபாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது 2 இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர், சத்தியமூர்த்தி கடை அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு, கையில் அரிவாளுடன் இறங்கி வந்து சத்தியமூர்த்தியை சரமாரியாக வெட்ட தொடங்கினார் . இதை சற்றும் எதிர்பாராத சத்தியமூர்த்தி அந்த கும்பலிடம் இருந்து தப்பி ஓட தொடங்கினார். எனினும், அந்த கும்பல் சத்தியமூர்த்தியை விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது.
பலத்த காயத்துடன் ரத்தவெள்ளத்தில் மயங்கிய சத்தியமூர்த்தி ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஈரோடு தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி இந்த நிலையில் நேற்றிரவு இவ்வழக்கு தொடர்பாக ஈரோடு ஆணைக்கல்பாளையம் சந்திரசேகரன் மகன் பிரதாப் (வயது 21), ஈரோடு சாஸ்திரி நகர் கந்தசாமி மகன் வைரவேல் (வயது 21), சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த மாதேஸ்வரன் மகன் மணிகண்டன் (வயது 21), ஈரோடு பெரியார்நகர் ராஜா மகன் ஷியாம் சுந்தர் (வயது 22) ஆகிய 4 பேரையும் ஈரோடு தெற்கு போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், பிரதாப் என்பவரின் தாயாரிடம் சத்தியமூர்த்தி கள்ளத் தொடர்பில் இருந்து வந்ததும், இதை பிரதாப் கைவிட வேண்டும் என்று பல முறை எச்சரித்தும் சத்தியமூர்த்தி தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்ததால் ஆத்திரமடைந்த பிரதாப் தனது நண்பர்களுடன் சேர்ந்து இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறினர். இதனையடுத்து, கைதான 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu