பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது.!
இண்டூரில் பயிற்சி புத்தகம் வாங்க சென்ற பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது
HIGHLIGHTS
தருமபுரி மாவட்டம், இண்டூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 14 வயது மாணவி, கூலிக்கொட்டாயில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா தொற்று காரணமாக பள்ளிகளுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்தது.
இதனையடுத்து மாணவர்கள் அனைவரும் வீடுகளில் இருந்தவாறு படித்து வருகின்றனர். இதனிடையே பள்ளிகளில் பயிற்சி புத்தகம் வழங்கப்படுவதாக கூறப்பட்டது. இதனால் தருமபுரி மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகள் பயிற்சி புத்தகங்களை வாங்குவதற்காக பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்.
அதே போன்று பயிற்சி புத்தகம் வாங்குவதற்காக கடந்த புதன்கிழமை மாணவி கூலிக்கொட்டாயில் உள்ள பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது அதே பள்ளியில் கணித ஆசிரியராக மல்லியம்பட்டியை சேர்ந்த கோவிந்தன் 43, என்பவர் மாணவிக்கு பயிற்சி புத்தகம் வழங்கும்போது பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதன் பின்னர் அழுதுகொண்டே மாணவி வீடு திரும்பியுள்ளார். நடந்த சம்பவம் குறித்து மாணவி, தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து மாணவியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரை தொடர்ந்து கணித ஆசிரியர் கோவிந்தன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்தார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.
ஆசிரியர் கோவிந்தனின் மனைவியும் ஒரு ஆசிரியை ஆவார். அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.