தமிழகத்தில் தயார் நிலையில் 4,967 நிவாரண முகாம்கள்: அமைச்சர் தகவல்
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக பாதிக்கப்படும் மக்கள் தங்குவதற்கு 4967 முகாம்கள் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் ராமச்சந்திரன் கூறினார்.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 21ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக வைகை அணை நிரம்பியது. மேலும் கடந்த இரண்டு நாட்களாக சென்னை. காஞ்சிபுரம். செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களிலும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் தீவிரமடையும். புயல் சின்னம் உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பதால் மழை வெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்துள்ளது.
இதன் காரணமாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தங்களது மாவட்டத்தில் தயார் நிலையில் மணல் மூட்டைகள் மற்றும் பாதிக்கப்படும் மக்கள் தங்குவதற்கு நிவாரண முகாம்களை அமைத்துள்ளனர். இதனை அந்தந்த மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகள் பார்வையிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சென்னையில் ஒரு நிவாரண முகாமை பார்வையிட்ட தமிழக வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ் .ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில் தமிழகத்தில் 4967 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu