தடுப்பூசி மருத்துவம் மெய்யும் பொய்யும் : Dr.S.வெங்கடாசலம்..!

தடுப்பூசி மருத்துவம் மெய்யும் பொய்யும் : Dr.S.வெங்கடாசலம்..!
"கொடியசைந்ததும் காற்று வந்ததா? காற்று வந்ததால் கொடி அசைந்ததா?" இந்த பாடல் இந்த கட்டுரைக்கு பொருத்தமானதாக இருக்கும்.

இயற்கை ரசனைகளில் தோய்ந்த கவித்துவத்தோடு , முத்து முத்தான கேள்விப் பூக்களை அடுக்கி அழகிய காதல் பாடலாய் தொடுத்த கவியரசு கண்ணதாசனின் பாடல் வரிகள் இவை. மருத்துவத் துறைக்குள் இதுபோன்ற ஒரு கேள்வி நீண்டகால விவாதப் பொருளாய் விளங்கி வருகிறது. "கிருமி வந்ததால் நோய் வந்ததா? நோய் வந்ததால் கிருமி வந்ததா?" இதற்கான விடையும், விளக்கமும் புரிந்து கொண்டால் மட்டுமே நோய்கள் மீதான அச்சம் அகலும்; ஆரோக்கியம் பற்றிய தெளிந்த பார்வையும், உண்மையான சுய விழிப்பும் அதிகரிக்கும்.

கிருமிகள் என்பவை நுண்ணுயிரிகள். அவை இல்லாத இடம் ஏதுமில்லை; எங்கும் நிறைந்து உள்ளன. அறிவியல் அறிஞர்களின் கூற்றுப்படி லட்சக்கணக்கான வகைகளில் கோடிக்கணக்கான கிருமிகள் நம்மைச் சுற்றிலும் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கின்றன. கிருமிகளே நோய்களின் தாய் என்றால் தாய் தோன்றிய பிறகு தானே குழந்தை தோன்ற வேண்டும்? நேர்மாறாக குழந்தை முதலில் பிறந்து.. தாய் பின்னர் பிறந்தால்.. அது தாயா? அல்லது குழந்தையின் மகளா?

டக்ளஸ் ஹ்யூம் (Douglas Hume) என்பவர் எழுதிய 'Bechamp And Pasteur' நூலில் பாஸ்டியரின் கிருமியியல் கொள்கை தவறானது என்று விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்ட செய்திகள் உள்ளன. ஜான் பி ஃபிரேசர் (John B Fraser) என்ற கனடாவின் புகழ் பெற்ற மருத்துவ நிபுணர் 'லான்செட்' (CANADIAN LANCET) என்ற மருத்துவ இதழில் 1916 ஜூன் மாதம் எழுதிய ஆய்வுக் கட்டுரை தெளிவாக உண்மையை உரக்கப் பேசியது. தான் கவனித்து வந்த பல கேஸ்களில் மனிதன் நோய்வாய்ப்பட்ட சமயத்தில் வழக்கமான நோய்க்கிருமிகள் காணப்படுவதில்லை என்றும், எனவே நோய் தோன்றுவதற்கு கிருமிகள் காரணமாக இருக்க முடியாது என்றும் உறுதிபட நிறுவியுள்ளார்.

கிருமிகளில் நன்மை செய்யும் கிருமிகள் அதிகமா? தீமை செய்யும் கிருமிகள் அதிகமா? என்று நுட்பமாக ஆராய்ந்தால் நோய் பரப்பும் கிருமிகள் மிக மிகக் குறைவு என்பதுதான் உண்மை. பின் ஏன் கிருமிகள் மீது இவ்வளவு பயம்? "சாதாரண நோய்கள் முதல் ஆட்கொல்லி நோய்கள் வரை அனைத்து நோய்களுக்கும் கிருமிகளே மூலக்காரணம்.. கிருமிகளின்றி நோய் இல்லை" என்ற புனைவை மருத்துவ அறிவியலின் பெயரால் பரப்பிக் கொண்டிருக்கும் அலோபதி மருத்துவம் தான் கிருமிகள் குறித்த பயத்தின் மீது தனது அஸ்திவாரத்தைக் கட்டமைத்துள்ளது.

அலோபதியின் எல்லைகளுக்குள் அடைபடாத நோயோ, நோய்க்கிருமிகளோ இருந்தால் அதுகுறித்து அலோபதி மருத்துவத் துறையினர் பெரும் பீதியைக் கிளப்புவது வாடிக்கையாகி விட்டது. சில நோய்களில் அவர்களது அறிவினால், ஆராய்ச்சிக் கருவிகளால் அறிய முடியாத கிருமிகள் இருந்தால் 'மர்ம நோய்' 'மர்ம காய்ச்சல்' என்றெல்லாம் செய்திகள் வெளிவரும். கிருமிகளின் பெயர்களோ, நோய்களின் பெயர்களோ இன்னும் அறியப்படாத நிலையில் அலோபதி மருத்துவம் கையறு நிலையில் தத்தளிக்கும்.

ஹோமியோபதி உள்ளிட்ட இந்திய மருத்துவர்களின் அணுகுமுறையும் சிகிச்சை முறையும் முற்றிலும் மாறானவை நோயின் பெயர்களுக்கோ கிருமிகளின் பெயர்களுக்கோ ஹோமியோபதியில் மருந்துகள் அளிக்கப்படுவதில்லை. ஆயினும், ஆங்கில மருத்துவத் துறை பீதி ஏற்படுத்தி வரும் பெரும்பாலான நோய்களை முறியடிக்கும் ஆற்றல் ஹோமியோபதிக்கு உள்ளது என்பதை பன்றிசுரம், பறவை சுரம், டெங்கு சுரம், சிக்குன்குனியா போன்ற பல தொற்றுநோய்கள் பரவும் போது அறிய முடிகிறது.

நோய்க்கிருமிகள் குறித்த தவறான, தலைகீழான பார்வை காரணமாகவே தடுப்பூசி மருத்துவத்தை ஆங்கில மருத்துவத் துறை உயர்த்திப் பிடிக்கிறது; உண்மைகளை இருட்டடிப்பு செய்கிறது. 1798 இல் அம்மை குத்தும் நவீன முறையை ஜென்னர் அறிமுகம் செய்தார். 1806 இல் அம்மை ஒரு கொள்ளை நோயாக பரவத் தொடங்கியது. சில ஆண்டுகள் விட்டுவிட்டு கொள்ளை நோய் வடிவில் மீண்டும் மீண்டும் தாக்கியது. ஒவ்வொரு முறையும் முன்பை விடவும், பயங்கரமாகவும், கடுமையாகவும் இருந்தது. இதற்கு காரணம் 'அம்மைப்பால்' என்பதை அன்று உணரப்படவில்லை. மாறாக, கூடுதலாக அம்மை குத்தினார்கள்.

1853 இல் இங்கிலாந்தில் குழந்தைகளுக்கு கட்டாய அம்மை குத்தும் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதற்கு முன், சில ஆண்டுகளுக்கு ஒருமுறை வந்து கொண்டிருந்த அம்மைநோய், அதன் பிறகு வருடம் தவறாமல் வரத் தொடங்கியது. மேலும் மேலும் அதிக உயிர்கள் கொள்ளை போயின.1871இல் மிகப்பெரிய கொள்ளை நோயாகப் பரவி 79000 பேர் பலியாயினர். அவர்களின் ஏற்கனவே அம்மை குத்தப்பட்டவர்கள் 42000 பேர். அதற்கு முன் எந்த நூற்றாண்டிலும் அந்த நோய்க்கு இவ்வளவு பேர் இரையானது இல்லை.

அதிருப்தியும் வெறுப்பும் கொண்டு கிளர்ந்த மக்கள் பகுதியினரை அரசு கைது செய்து வழக்குத் தொடுத்தது. ஆயினும், மக்களின் எதிர்ப்பு வலுவானது. கட்டாய அம்மை குத்தும் சட்டத்தை மறுக்கும் இயக்கத்தின் குரல் ஓங்கி ஒலித்ததன் விளைவாக 1889இல் 'ராயல் கமிஷன்' அமைக்கப்பட்டது. "விருப்பம் இல்லாதவர்கள் அம்மை குத்த வேண்டாம்" என்று கமிஷன் பரிந்துரைத்தது. அம்மை குத்தும் சட்டம் பிறப்பித்த 'கன்சர்வேட்டிவ் கட்சி' 1905இல் வீழ்ந்தது. 'லிபரல் கட்சி' ஆட்சிக்கு வந்து, அரை நூற்றாண்டு காலம் அமலில் இருந்த கட்டாய அம்மை குத்தும் சட்டம் ஒழிக்கப்பட்டது. அதன்பின் தான் அம்மை நோயும் அந்த நாட்டை விட்டு ஒழியத் தொடங்கியது.

1907இல் கட்டாய அம்மை குத்தல் கைவிடப்பட்ட பிறகு 1936 வரையிலான 30 ஆண்டுகளில் பிரிட்டனில் 100 லட்சம் குழந்தைகளுக்கு அம்மை குத்தப்பட்டது. இதில் 227 குழந்தைகள் இறந்தனர். 180 லட்சம் குழந்தைகள் அம்மை குத்தவில்லை. அவர்களில் 86 குழந்தைகள் மட்டுமே அம்மை நோயால் இறந்தனர். இந்த வரலாற்று உண்மை இன்று வரையிலும் ஆங்கில மருத்துவத் துறையினரால் இருட்டடிப்பு செய்யப்படுகிறது.

தடுப்பூசிகளின் தந்தை டாக்டர் ஜென்னர் தனது முதல் மகனுக்கு தடுப்பூசி போட்டு மூளை பாதிக்கப்பட்டு இறந்து போன பின்பு அதிர்ச்சியடைந்து இரண்டாவது மகனுக்கு தடுப்பூசி போடவேயில்லை. போலியோ சொட்டு மருந்தைக் கண்டுபிடித்த 'ஜோனல் சால்க்' "அமெரிக்காவில் 1961க்குப் பின் ஏற்பட்ட அனைத்து போலியோவிற்கும் போலியோ சொட்டு மருந்து தான் காரணம்" என்று செனட் கமிட்டியில் வெளிப்படையான வாக்குமூலம் அளித்திருந்தார்.

தடுப்பூசிகளின் நச்சுத்தன்மைகளால் உடனடி மரண நிகழ்வுகள் (SDS-Sudden Death Syndrom), தவிர தடுப்பூசிகளால் ஏற்படும் எதிர்காலப் பின்விளைவுகள் எண்ணற்றவை. நரம்பியல் சார்ந்த ஆட்டிசம், புற்றுநோய், தோல் நோய், எதிர்பாற்றல் அழிவு போன்ற பல உடல்நலப் பாதிப்புகள் உருவாகின்றன. டென்மார்க் நாட்டில் தடுப்பூசி போட்டவர்களில் ஆட்டிசம் நோய் பாதித்தவர்கள் 4,40,000.

தடுப்பூசி போடாத குழந்தைகளில் ஆட்டிஸம் ஏற்பட்டவர்கள் 97000. இந்தத் தகவலை "journal of American physicians and surgeons 2004". MMR and Autism in Perspective: The Denmark Story" என்ற தலைப்பிலான கட்டுரையில் Dr.Canot Stott ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஹோமியோபதி கருத்துப்படி தடுப்பூசி என்பது நோய் எதிர்ப்பு மண்டலம் முழுமை பெற்றிராத குழந்தைகளின் உயிராற்றல் மீது நடத்தப்படும் தாக்குதலே! ஹோமியோபதி பார்வையில் Vaccinations என்பவை உறைந்த நோய்களே (Frozen Diseases). இவற்றின் நச்சுத் தன்மைகளால் விலைமதிப்பில்லாத இயற்கை எதிர்ப்பாற்றல் சீர்குலைக்கப்படுகிறது. தன்னைத் தானே நலப்படுத்தும் உடலின் இயல்பு பாதிக்கப்படுகிறது. தடுப்பூசி மருத்துவம் என்பது வரலாறு நெடுக லட்சக்கணக்கான குழந்தைகளைப் பலி வாங்கியுள்ளது என்பதை அறிந்த பின், எவரும் தமது குழந்தைகளோடு நடைபெறும் மரண விளையாட்டை அனுமதிக்க அஞ்சுவார்கள்.

தடுப்பூசிகளின் பின்னணியில் மருத்துவ அரசியல், பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் வணிக நோக்கம் தவிர வேறெந்த புனித நோக்கமும் இல்லை. இதற்கு செலவிடப்படும் பல்லாயிரம் கோடித் தொகையை அடிப்படைத் தேவைகளான சத்தான உணவு, சுத்தமான குடிநீர், அனைவருக்கும் வேலைவாய்ப்பு, தேவையெனில் ஹோமியோ, சித்தா, ஆயுர்வேத தடுப்பு மருத்துவம் என அரசுகள் செலவிட முன்வர வேண்டும். தடுப்பூசிகளை,தடுப்பு மருத்துவத்தை ஏற்றுக்கொள்ளாத, மாற்று மருத்துவங்களைக் கடைப்பிடிக்கும் மக்கள் மீது தடுப்பூசிகளை திணிப்பதை தவிர்ப்பதே ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானது.

(-Dr.S.வெங்கடாசலம் எழுதிய இந்த கட்டுரை பிப்ரவரி 2017 இல் கொரோனா பெருந்தொற்று பரவுவதற்கு முன்பே www.dinamani.com ல் வெளிவந்தது.)

இந்தக்கட்டுரையை படித்த பின்னர் ஒரு சந்தேகம் எழுகிறது. கொரோனாவுக்கு தடுப்பூசி போட்டுக்கொண்ட நடிகர் விவேக் இறப்பு...???

Tags

Next Story