வங்கியில் மாதச்சம்பளத்துடன் தவறுதலாக விழுந்த ரூ.1.42 கோடியுடன் ஊழியர் ஓட்டம்..!
மாத ஊதியத்துடன் சேர்த்து, தவறுதலாக ரூ.1.42 கோடி தனது வங்கிக்கணக்கில் விழுந்ததால், மகிழ்ச்சியில் மூழ்கிய கல்வி நிறுவன ஊழியர் அதனை எடுத்துகொண்டு ஓட்டம் பிடித்தார்.
இந்த ருசிகர சம்பவம் சிலி நாட்டில் தான் நிகழ்ந்துள்ளது. சிலி நாட்டைத் சேர்ந்த தனியார் நிறுவனம், தங்கள் ஊழியர்களுக்கு வழக்கம் போல் மாத சம்பளத்தை போட்டது. அதில் ஒரு ஊழியருக்கு மாத சம்பளம் இந்திய மதிப்பில் 40 ஆயிரம் ரூபாய் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், அந்நிறுவனம் சம்பந்தப்பட்ட அலுவலரின் கவனக்குறைவாகவோ, தவறுதலாகவோ அந்த ஊழியர் கணக்கில் இந்திய மதிப்பில் ரூ.1.42 கோடி ரூபாயை செலுத்தி விட்டது. அதாவது, இது அவருடைய 286 மாத சம்பளம் ஆகும்.
ஊழியருக்கு விஷயத்தை கூறிய நிறுவனம் தவறுதலாக செலுத்திய பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளது. ஆனால், மழுப்பலாக பதில் கூறி தாமதப்படுத்தி வந்த ஊழியர் அனைத்துப்பணத்தையும் வாரி சுருட்டிக்கொண்டு தலைமறைவாகி விட்டார். இதையடுத்து காவல்துறையில் புகார் அளித்துள்ள நிறுவனம் மண்டையைப்பிய்த்து கொண்டு காத்திருக்கிறது.