ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ் விளக்கம்!

செஸ் விளையாட்டில் அரசியல்வாதி தலையிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாமல் கருத்து தெரிவித்ததாக கேரி காஸ்பரோவ் விளக்கமளித்துள்ளார்

Update: 2024-05-05 03:23 GMT

காஸ்பரோவ் மற்றும் ராகுல் 

ரஷ்யாவைச் சேர்ந்த செஸ் வீரர் கேரி காஸ்பரோவ் தனது எக்ஸ் பதிவில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி முதலில் ரேபரேலியில் வெல்லட்டும். அதன்பின், செஸ் போட்டியிலுள்ள முதன்மை வீரர்களை வெல்லலாம் என தெரிவித்தது வேகமாகப் பரவத் தொடங்கியது. இதனையடுத்து அந்த பதிவு குறித்து செஸ் வீரர் கேரி காஸ்பரோவ் முழு விளக்கத்தை அளித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர் ராகுல் காந்தி உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பாகத் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்ததது தொடர்பாகக் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அந்த பதிவில், ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவது குறித்து பலர் கருத்துகளைக் கூறலாம். ஆனால் ராகுல் காந்தி திறமை வாய்ந்த அரசியல்வாதி மற்றும் திறமை வாய்ந்த செஸ் வீரரும் கூட. காங்கிரஸ் கட்சி ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவது குறித்து நீண்ட ஆலோசனை செய்து அரசியல் உத்தியைக் கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு பாஜகவையும் அதன் ஆதரவாளர்களையும் கலங்கடித்துள்ளது என பதிவிட்டிருந்தார்.

இதற்கு முன்பே ராகுல் காந்தி தனது சமூக வலைத்தளத்தில் செஸ் மீதான ஆர்வம் குறித்தும். தனக்குப் பிடித்த செஸ் வீரர் ரஷ்யாவின் கேரி காஸ்பரோவ் என்றும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்தார்.

இந்த நிலையில் எக்ஸ் பயனாளர் ஒருவர் எக்ஸ் வலைத்தளப் பதிவில், நல்லவேலை கேரி காஸ்பரோவ், விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் ஓய்வு பெற்றுள்ளனர். இல்லாவிட்டால் பெரிய செஸ் மேதையை எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்கும் எனப் பதிவிட்டிருந்தார். மேலும் இந்த பதிவை கேரி காஸ்பரோவை இணைத்துப் (Tag) பதிவு செய்துள்ளார்.

இதற்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி கேஸ்பரோவ் தரப்பில், "முதலில் ராகுல் காந்தி ரேபரேலியில் வெற்றி பெறட்டும் பின் செஸ் வீரர்களை எதிர்கொள்ளலாம்" என தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருந்தார்.

இந்த பதிவு இந்தியா முழுவதும் வேகமாகப் பரவத் தொடங்கியது. இதனைத் தெரிந்து கொண்ட ரஷ்ய செஸ் வீரர் கேரி கேஸ்பரோவ் மீண்டும் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், "என்னுடைய பதிவு இந்திய அரசியலை முன்வைத்துக் கூறிய கருத்து என எடுத்துக் கொள்ள வேண்டாம். செஸ் விளையாட்டில் அரசியல்வாதி தலையிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாமல் கருத்து தெரிவித்ததாக எடுத்துக் கொள்ள வேண்டும்" என விளக்கம் அளித்துள்ளார்.

Tags:    

Similar News