திருவண்ணாமலை மாவட்ட கிரைம் செய்திகள்

வந்தவாசியில் உள்ள பல்பொருள் அங்காடியில் ரூ.50 ஆயிரம், செல்போன்களை திருடிய முன்னாள் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-02-27 12:42 GMT

பைல் படம்.

வந்தவாசியில் அச்சரப்பாக்கம் சாலையில் காவலர் குடியிருப்பு அருகில் பிரபல தனியார் பல்பொருள் விற்பனை கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு விற்பனை முடிந்து கடையை வழக்கம்போல் ஊழியர்கள் பூட்டிவிட்டுச் சென்றனர். நேற்று காலை கடை ஊழியர்கள் மீண்டும் கடையை திறந்தனர். அப்போது கடையில் வைத்திருந்த ரூ.50 ஆயிரம், 3 செல்போன்கள், 3 ஸ்மார்ட் வாட்சுகள் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதையடுத்து கடையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஊழியர்கள் ஆய்வு செய்தனர்.

இதில், ஏற்கெனவே அங்காடியில் பணியாற்றிய வந்தவாசி பொட்டிநாயுடு தெருவைச் சோந்த லோகநாதன் (24) , அங்காடி பின்பக்கமாக நுழைந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து கடையின் உரிமையாளர் ஏ.இஷாத் வந்தவாசி தெற்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்று லோகநாதனை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திடீரென தீப்பிடித்து எரிந்த மினி லாரி:

கலசபாக்கம் அருகே விண்ணுவாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார், ஆட்டோ டிரைவர். இவருக்கு சொந்தமான மினி லாரியை அவரது நண்பர் நந்தகோபால் வீட்டின் அருகே நிறுத்தி வைத்து இருந்தார்.

இந்த நிலையில் அதிகாலையில் மினிலாரி திடீரென தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதாக வினோத்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர் நேரில் சென்று தீயை அணைக்க முயற்சி செய்தார் அதற்குள் மினி லாரியின் முன்பகுதி முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. மேலும் டயர்களும் தீயில் எரிந்து நாசமானது.

இதுகுறித்து அவர் கலசபாக்கம் போலீஸ் நிலையத்தில் மினிலாரியை தீவைத்து கொளுத்திய மர்ம நபர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி மாணவி கர்ப்பம் வாலிபருக்கு வலை:

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் 17 வயது பள்ளி மாணவி. இவரது பெற்றோர் சென்னையில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். எனவே, மாணவி தனது பாட்டி, தாத்தா பாதுகாப்பில் பள்ளியல் படித்து வந்தார். இந்நிலையில், அத்திமூர் பகுதியை சேர்ந்த ரங்கநாதன் மகன் சபரி (24) என்பவர் மாணவிக்கு காதல் வலைவீசியுள்ளார். தொடர்ந்து, மாணவியை தனது வீட்டின் மொட்டை மாடிக்கு இரவு நேரத்தில் வரவழைத்து திருமண ஆசைகாட்டி பலமுறை உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கர்ப்பமான மாணவி உள்ளுர் அரசு செவிலியர் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு மாணவி கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து டாக்டர்கள் போளூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கவிதா, சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சி ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று புகாரை பெற்றனர். தொடர்ந்து, போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் சபரி மீது வழக்கு பதிவு செய்தனர். இதையறிந்த சபரி தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News