விவசாயி வீட்டில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து 10 சவரன் நகை திருட்டு
வந்தவாசி அருகே விவசாயியின் வீட்டில் பட்டப்பகலில் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகளை திருடிச்சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். விவசாயி. இவர் கேரளாவில் உள்ள மகளை பார்த்து விட்டு மேல்மருவத்தூர் சென்றுவிட்டு நேற்று மாலை வீடு திரும்பினார்.
பின்னர் வீட்டின் எதிரே உள்ள விவசாய நிலத்திற்கு சென்றுவிட்டு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 10 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து அவர் பொன்னூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று முக்கிய தடயங்களை சேகரித்தனர்.
இது தொடர்பாக நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.