நஷ்டஈடு வழங்காததால் அரசு விரைவு பஸ் ஜப்தி

விபத்தில் இறந்த டிரைவர் குடும்பத்தினருக்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு விரைவு பஸ் கோர்ட் ஊழியர்களால் ஜப்தி செய்யப்பட்டது.

Update: 2021-09-24 11:22 GMT

ஜப்தி செய்யப்பட அரசு விரைவு பேருந்து.

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகே உள்ள படவேடு சாமந்திபுரம் கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் அர்ஜுனன். கடந்த 2004-ம் ஆண்டு சந்தவாசல் பகுதியில் அரசு விரைவு பஸ் மோதியதில் அர்ஜுனன்  சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது மனைவி வள்ளியம்மாள் மற்றும் குடும்பத்தினர் திருவண்ணாமலை மாவட்ட கோர்ட்டில் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, லாரி டிரைவர் அர்ஜுனன் குடும்பத்தினருக்கு 6 லட்சத்து 68 ஆயிரத்து 148 ரூபாய் நஷ்டஈடு வழங்க போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவிட்டார். ஆனால் போக்குவரத்து கழகம் நஷ்டஈடு வழங்காமல் காலதாமதம் செய்து வந்தது. இதனையடுத்து அர்ஜுனன் குடும்பத்தினர் நிறைவேற்றுதல் மனுவை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, அர்ஜுனன் குடும்பத்திற்கு 6 லட்சத்து 72 ஆயிரத்து 106 ரூபாய் வழங்க போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டார்.

ஆனாலும் போக்குவரத்து கழகம் நஷ்டஈடு வழங்கவில்லை. தொடர்ந்து அர்ஜுனன் குடும்பத்தினர் மீண்டும் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த மாவட்ட நீதிபதி திருமகள், அரசு விரைவு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் திருச்சியில் இருந்து கண்ணமங்கலம் வழியாக வேலூர் சென்ற விரைவு பஸ்சை ஆரணி கோர்ட் அமீனா மற்றும் பணியாளர்கள் ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர். முன்னதாக அந்த பஸ்சில் இருந்த பயணிகள் வேறு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News