திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் தூய்மைப்பணி

சித்ரா பவுர்ணமியையொட்டி கிரிவலப்பாதையில் நடந்த தூய்மைப்பணியை பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு ஆய்வு செய்தார்.

Update: 2022-04-18 00:42 GMT

கிரிவலப்பாதையில் நடந்த தூய்மைப்பணியை பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு ஆய்வு செய்தார்.

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு,  திருவண்ணாமலையில்  நேற்று முன்தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இதன் தொடர்ச்சியாக, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் 400-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை கொண்டு தூய்மைப்பணி நடைபெற்றது. இப்பணிகளை,  பொது பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முன்னதாக அவர் கூறியதாவது: கொரோனா தொற்றின் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை செய்யப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு தொற்று பாதிப்பு குறைந்ததால், கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி தரப்பட்டது. 

இதன் காரணமாக சுமார் 20 லட்சம் பேர் சித்ரா பவுர்ணமியில் கிரிவலம் சென்றனர். போக்குவரத்துத்துறை சார்பில், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக சிறப்பான ஏற்பாடுகளை செய்யப்பட்டிருந்தது.

அதேபோல் கிரிவலப்பாதையை சுத்தம் செய்வதற்காக ஏற்கனவே கடந்த 10-ந் தேதி மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்களை சேர்ந்த சுமார் 1560 பேர் மாபெரும் தூய்மைப்பணிகளை மேற்கொண்டனர். சுகாதாரத்துறை மூலமாக கிரிவலப்பாதையில் 4 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.  இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது துணை சபாநாயகர் பிச்சாண்டி, கலெக்டர் முருகேஷ், சி.என்.அண்ணாதுரை எம்.பி., மு.பெ.கிரி எம்.எல்.ஏ., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News