விவசாயி தீக்குளித்த சம்பவம்; விஏஓ சஸ்பெண்ட்

திருவண்ணாமலை அருகே விஏஓ மற்றும் 3 உதவியாளர்கள் சஸ்பெண்ட் செய்து, கலெக்டர் அதிரடி உத்தரவிட்டார்.

Update: 2024-07-03 01:47 GMT

விவசாயி தீக்குளித்த சம்பவத்தில், விஏஓ சஸ்பெண்ட் செய்யப்பட்டார் ( மாதிரி படம்)

திருவண்ணாமலை மாவட்டம்  கலசபாக்கம் அடுத்த கல்லரப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், இவர் விவசாயி ஆவார். இவருக்கு திருமணமாகி மனைவி லட்சுமி, மூன்று குழந்தைகளும் உள்ளனர். ராமகிருஷ்ணனுக்கு சொந்தமாக நான்கு ஏக்கர் நிலம் துரிஞ்சாபுரம் ஒன்றியம் தேவனாம்பட்டு அருகே ஊத்திரம் பூண்டியில் உள்ளது.

இந்த நிலத்திற்கு பட்டா மாற்றம் மற்றும் அடங்கல் சான்றிதழ் கேட்டு தேவனாம்பட்டு விஏஓ அலுவலகத்தில் விண்ணப்பம் செய்துள்ளார். தொடர்ந்து, கடந்த 10 நாட்களாக விஏஓ அலுவலகம் சென்று சான்றிதழ் குறித்து கேட்டு வந்துள்ளார். ஆனால், கூட்டு பட்டா என்பதால் அடங்கல் வழங்குவதில் விஏஓ காந்தி என்பவர் காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று மீண்டும் விஏஓ அலுவலகம் சென்ற விவசாயி ராமகிருஷ்ணன், பட்டா மாற்றம் மற்றும் அடங்கல் சான்றிதழ் குறித்து கேட்டுள்ளார். ஆனால், நேற்று முன்தினம் சான்றிதழ் கிடைக்காததால் மன வேதனை அடைந்த ராமகிருஷ்ணன் திடீரென விஏஓ அலுவலகம் முன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார்.

கேனில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை தன் உடம்பின் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனை பார்த்து பதறிய அங்கிருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவி ரசிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது, இந்நிலையில் நேற்று. மேல் சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் ராமகிருஷ்ணன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து கலசபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விஏஓ அலுவலகம் முன்பு விவசாயி தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விஏஓ சஸ்பெண்ட்

இந்நிலையில் திருவண்ணாமலை கோட்டாட்சியர் மந்தாகினி இது சம்பந்தமாக விசாரணை நடத்தி மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அளித்தார் . அதன் அடிப்படையில் தேவனாம்பட்டு விஏஓ காந்தி, அவரது உதவியாளர்கள் குமார், மாரிமுத்து, சின்னசாமி ஆகிய நான்கு பேரை சஸ்பெண்ட் செய்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

Similar News