சாத்தனூர் அணையில் காவலாளியை கட்டிப்போட்டு சந்தன மரம் வெட்டிக் கடத்தல்

சாத்தனூர் அணை வளாகத்தில் காவலாளியை கட்டிப்போட்டு சந்தன மரம் வெட்டி கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Update: 2024-06-23 11:12 GMT

 வெட்டபட்ட சந்தனமரம்

சாத்தனூர் அணை வளாகத்தில் காவலாளியை கட்டிப்போட்டு சந்தன மரம் வெட்டி கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

திருவண்ணாமலை மாவட்டத்தில் மிகவும் பிரபலமான சுற்றுலா தலமாக விளங்குவது தண்டராம்பட்டு அருகே உள்ள சாத்தனூர் அணையாகும். பொன்விழா கண்ட இந்த சாத்தனூர் அணை 119 அடி உயரம் கொண்டது. தற்போது 82 அடியாக நீர் மட்டம் உள்ளது.

இந்த அணை பகுதியில் பொதுப்பணித்துறை அலுவலகம், நீர்வளத் துறை அலுவலகம், காவல்நிலையம், தபால்நிலையம் ,, நீர் மின்சாரம் தயாரிக்க கூடிய இடம், அணையில் பணிபுரியும் ஊழியர்கள் குடியிருப்பு, சாத்தனூர் வனச்சராகம் உள்ளிட்ட அலுவலகங்கள் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் வனத்துறை கட்டுப்பாட்டில் முதலைப் பண்ணை உள்ளது. ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய முதலை பண்ணை இந்த அணையில்தான் உள்ளது.

இங்கு 378  முதலைகள் உள்ளன. முதலையை பாதுகாப்பதற்காக வனசரக அலுவலர் ராஜராஜன், வனக்காப்பாளர்கள் சேகரன், இந்திரகுமார், தற்காலிக ஊழியர்கள் 3 பேர் பணிபுரிந்து வருகின்றனர். முதலைப் பண்ணை வளாகத்தில் பல்வேறு வகையான உயர்தர மரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. மேலும் அந்தப் பகுதியில் பழமை வாய்ந்த சந்தன மரம் ஒன்று இருந்தது. இந்நிலையில், இங்கு நேற்று காவலராக சேகரன் இருந்துள்ளார். இரவு 10 மணியளவில் முகமூடி அணிந்தபடி வந்த 4 பேர் கும்பல், முதலை பண்ணை உள்ளே சென்று காவலர் சேகரனை தாக்கி கை, கால்களை கட்டிப்போட்டுள்ளனர். மேலும் மரம் அறுக்கும் எந்திரம் மூலம் சந்தனமரத்தை அடியோடு அறுத்து துண்டு துண்டாக்கி அவர்கள் எடுத்து வந்த மினி லோடு வேனில் ஏற்றி கடத்தி சென்று விட்டனர்.

அப்போது பரவலாக சாத்தனூர் அணை பகுதியில் மழை பெய்ததால் தற்காலிக ஊழியர் இரவு காவல் பணிக்கு வருவதற்கு காலதாமதம் ஆகி, இரவு 11 மணிக்கு வந்தாராம். அப்போது சேகரனை கட்டிப்போட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தவர் பின்னர் சுதாரித்து காவலர் சேகரனின் கட்டுகளை அவிழ்த்து விட்டுள்ளார். பின்னர் சந்தன மரத்தை மர்ம நபர்கள் வெட்டி எடுத்துச் சென்றுள்ளது குறித்து உடனடியாக வனசரக அலுவலர் ராஜராஜன், மாவட்ட வன அலுவலர் யோகேஷ் கார்க் ஆகிய இருவருக்கும் போன் மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் யோகேஷ் கார்க் சாத்தனூர் அணைக்கு நேரில் சென்று அங்க சந்தன மரம் இருந்த பகுதியை பார்வையிட்டார்.

பின்னர் முதலை பண்ணையில் பணிபுரியும் ஊழியர்களிடம் தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்தினார்.

மேலும் சாத்தனூர் அணைநுழைவு வாயில் மற்றும் அருகிலுள்ள சி.சி. டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்து திருடர்கைள வலைவீசித் தேடி வருகின்றனர்.

காவலாளியை கட்டிப்போட்ட முகமூடி மனிதர்கள் சந்தன மரத்தை வெட்டி கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News