ஏரியில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி

கலசப்பாக்கம் அருகே ஏரியில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்தனர். நீரில் மூழ்கிய மற்றொரு சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டான்.

Update: 2022-12-18 02:30 GMT

கலசபாக்கம் அருகே, ஏரியில் மூழ்கி, மூன்று சிறுவர்கள் உயிரிழந்தனர். (கோப்பு படம்)

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த லாடவரம் ஊராட்சிக்கு உட்பட்ட கெங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணதாசன் பெயிண்டர். இவரது மகன்கள் அருள் (வயது 10), அஜித் (9), சந்திப் (7). அருள் 5-ம் வகுப்பும், அஜித் 4-ம் வகுப்பும், சந்திப் 2-ம் வகுப்பும், லாடவரம் அரசு பள்ளியில் படித்து வந்தனர். அதே கிராமத்தைச் சேர்ந்த அரிகிருஷ்ணனின் ஒரே மகன் ஜீவன் குமார் (8). 3-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்நிலையில், நேற்று மாலை 4 மாணவர்களும் பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்தனர். பின்னர் 4 பேரும் ஒன்றாக சேர்ந்து, அதேப் பகுதியில் உள்ள ஏரியில் குளிக்க சென்றனர். அப்போது 4 பேரில் ஒரு மாணவன், பள்ளத்தில் தவறி விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. அவனை காப்பாற்றுவதற்காக முயன்றபோது, ஒருவர் பின் ஒருவராக தண்ணீரில் விழுந்து மூழ்கியுள்ளனர்.

அவர்களில் அஜித் மட்டும் தண்ணீரில் மிதந்தபடி கூச்சல் போட்டு உள்ளார்.

அதில் அஜித் என்ற சிறுவனை மட்டும் அவ்வழியாக வந்தவர்கள் மீட்டுள்ளனர். மற்ற சிறுவர்களின் நிலை குறித்து கிராமத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கிராம மக்களும்,பெற்றோரும் விரைந்து ஏரிக்கு வந்து சிறுவர்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். இரவு 7 மணிக்கு மேல் ஆகியும் மற்ற மாணவர்கள் வீட்டுக்கு வராததால் பெற்றோர்கள் தேடத் தொடங்கினர். அப்போதுதான் அந்த மூன்று மாணவர்களும், தண்ணீரில் மூழ்கியது தெரியவந்துள்ளது.

உடனடியாக போளூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து, தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரில் மூழ்கிய அருள், அவனது தம்பி சந்திப் மற்றும் ஜீவன் குமார் ஆகிய மூன்று பேரையும் சடலங்களாக மீட்டனர். இதை பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கலசப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த 3 சிறுவர்களின் சடலங்களை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News