கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவர் கைது

செய்யாறு அருகே கல்குவாரி அலுவலகத்தை சேதப்படுத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்

Update: 2024-03-29 10:58 GMT

கல்குவாரியை சேதப்படுத்திய இருவர் கைது ( மாதிரி படம்)

செய்யாறு அருகே கல்குவாரி அலுவலகம் சூறையாடப்பட்ட விவகாரம் தொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா கரந்தை கிராமத்தில் கல் குவாரி இயங்கி வருகிறது. இங்கிருந்து இயக்கப்படும் லாரிகளால் கிராமத்தில் உள்ள சாலை முற்றிலும் சேதமடைந்து பயன்பாட்டிற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டி கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மேலும் விதிமுறைகளி மீறி லாரிகளில் அதிகளவு பாரம் எற்றி செல்வதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே, இவ்வாறு செயல்பட்டு வரும் கல் குவாரிகளுக்கு ஆட்சேபனை தெரிவித்தும், குவாரிகளை அகற்றக் கோரியும் கிராம சபைக் கூட்டத்தில் பலமுறை தீா்மானம் நிறைவேற்றி அதன் நகல்கள் மாவட்ட ஆட்சியா், வெம்பாக்கம் வட்டாட்சியா், வட்டார வளா்ச்சி அலுவலா் உள்ளிட்ட பலருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாம். இருப்பினும், அந்தக் கல் குவாரிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

மேலும், விதிமுறைகளை மீறி செயல்படும் கல் குவாரிகளை அகற்றாவிட்டால் வருகிற மக்களவைத் தேர்தலை புறக்கணிப்போம் என கிராம மக்கள் சாா்பில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து இருந்தனா். மேலும், கல்குவாரியை மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று காலை கிராம மக்கள் ஒருங்கிணைந்த போராட்டக் குழுவினா் கரந்தை - காகனம் சாலையில் உள்ள கூட்டுச் சாலைப் பகுதியில் பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோா் கல் குவாரிகளை அகற்றக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இந்நிலையில் கரந்தை கிராமத்தை சேர்ந்த ஜெகதீசன், வல்லரசு, யுவராஜ் ஆகியோர் கல்குவாரிக்கு சென்று அங்கிருந்த 4 லாரிகளின் கண்ணாடிகளையும், அலுவலக கண்ணாடிகளையும் உடைத்தும் சேதப்படுத்தியுள்ளனர். மேலும் அங்கிருந்த பொருட்களை சூறையாடியதாகவும் கல்குவாரி நிர்வாக பொறுப்பாளர் பிச்சாண்டி தூசி போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் வழக்கு பதிவு செய்து வல்லரசு, யுவராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஜெகதீசனை தேடி வருகின்றனர்.

Similar News