சசிகலாவின் வருகை அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தும் -கொங்குநாடு மக்கள் கட்சி தலைவர்

சசிகலாவின் வருகை அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தும் என்பதே எதார்த்தமான உண்மை என திருப்பூரில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் பேட்டி.

Update: 2020-12-27 09:24 GMT

கோவை செழியன் அவர்களின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூரில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் பொது மருத்துவ முகாம் மற்றும் ரத்ததான முகாம் நடைபெற்றது.

இதனை துவக்கி வைப்பதற்காக வருகைதந்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியதாவது,

"வேளாளர் சமூகத்தின் பெயரை வேறு பிரிவினருக்கு வழங்குவது குறித்து முதலமைச்சர் அவசரகதியில் முடிவெடுத்துள்ளார், இது தமிழகத்தில் சாதி கலவரத்தை ஏற்படுத்தக்கூடிய சூழலை ஏற்படுத்தும், மேலும் கிராமங்களில் மக்களை சந்திக்க முடியாதவாறு எதிர்க்கட்சிகளை முடக்க நினைக்கின்ற செயலை அதிமுக அரசு செய்து வருகிறது. அச்செயலை அதிமுக கைவிட வேண்டும், பொங்கல் நேரத்தில் 2500 ரூபாய் என தேர்தலை மனதில் வைத்து திட்டத்தை அறிவித்து இருந்தாலும் அது அதிமுகவிற்கு கை கொடுக்காது. முதல்வர் வேட்பாளராக அதிமுக அறிவித்த நபரை ஏற்றுக் கொள்பவர்களோடு கூட்டணி என அதிமுக தெரிவித்திருக்க கூடிய சூழ்நிலையில், கூட்டணியில் உள்ள பாஜக அதனை ஏற்றுக்கொள்ளாத நிலையில் அவர்கள் கூட்டணியில் இல்லை என்பதை அதிமுகவால் அறிவிக்க முடியாத அவல நிலை ஏற்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும் சசிகலாவின் விடுதலை அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தும் என்பது எதார்த்தமான உண்மை எனவும் தெரிவித்தார். நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டு அரசு மருத்துவமனைக்கு ரத்த தானம் வழங்கினர் மேலும் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

Similar News