தொடர்மழை காரணமாக ஆண்டியப்பனூர் அணை நிரம்பியது

தொடர்மழை காரணமாக ஆண்டியப்பனூர் அணை நிரம்பியதால், பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

Update: 2021-10-14 16:31 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒருமாதமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், மாவட்டத்தில் உள்ள ஏரிகள் நிரம்பி உள்ளன. வாணியம்பாடி தொகுதியில் உள்ள ஆண்டியப்பனூர் அணை அதன்  மொத்த கொள்ளளவான 112.2 மில்லியன் கன அடியை எட்டி உள்ளது.

இந்த அணை மூலம் 14 ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பப்பட்டு, இதன் மூலம் 2,055 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும். கால்வாய் மூலம் நேரடியாக 2,970 ஏக்கர் புஞ்சை நிலமும், 2055 ஏக்கர் நஞ்சை நிலமும் என மொத்தம் 5 ஆயிரத்து 25 ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறும்.

பாசனத்திற்காக கடந்த ஜூன் மாதம் 19-ந் தேதி அணையில் இருந்து 40 மில்லியன் கனஅடி நீர் திறக்கப்பட்டது. தொடர் மழை காரணமாக உதயேந்திரம், பள்ளிப்பட்டு, சிம்மனபுதூர், பொம்மிக்குப்பம், மாடப்பள்ளி, பெருமாபட்டு, விண்ணமங்கலம், பசலிகுட்டை, துளசிபாய் உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. ஆண்டியப்பனூர் அணை நிரம்பி உள்ளதால் பாசன வசதிக்காக மீண்டும் தண்ணீரை திறந்துவிட வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அணை நிரம்பி வழிவதை தொடர்ந்து ஏராளமான பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் வருகை தருவதால், உடனடியாக அங்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது..

Tags:    

Similar News