நிதிச்சுமையை சமாளிக்க பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் வசம்!

கொரோனா தொற்றால் வருவாய் இழந்த நேரத்தில், நிதிச்சுமையை சமாளிக்க பொது மக்களிடம் வரி வசூல் செய்ய வேண்டிய நிலை உருவாகும். அதைத் தவிர்க்கவே குறிப்பிட்ட நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்க உள்ளோம். -முன்னாள் இந்திய வருவாய்த்துறை அதிகாரி

Update: 2021-02-07 17:41 GMT

மத்திய அரசு தாக்கல் செய்த 2021 பட்ஜெட் குறித்து பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் முக்கிய பிரமுகர்களால் விளக்கவுரை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட முன்னாள் இந்திய வருவாய்த்துறை அதிகாரி சரவணகுமார் இன்று தேனியில் செய்தியாளர்களை சந்தித்தார். தேனியில் உள்ள மாவட்ட பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் அவர் கூறுகையில்,

    கொரோனா தொற்றால் வருவாய் இழந்த நேரத்தில் பொதுமக்களிடம் அதிக வரி வசூல் செய்யாமல், பலன் இல்லாமல் கிடந்த சொத்துக்களில் இருந்து எவ்வாறு வருவாய் ஈட்டலாம் என்ற கண்ணோட்டத்துடன் பொது மக்களுக்கு சிரமம் இல்லாமல் இந்த ஆண்டு சீரிய முறையில் தயார் செய்யப்பட்டு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக வழக்கத்தைவிட உணவு, சுகாதாரத்திற்கு இந்த பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம் அளித்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கூட தமிழகத்திற்கு 3500 கிலோமீட்டர் தூரத்தில் தேசிய நெடுஞ்சாலைகள், சென்னை மெட்ரோ ரயில் திட்டம், மீன்வளத்துறைமுகம், கடல் வள பூங்கா என 4 புதிய திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளதாக கூறினர்.

     தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்குதல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் செய்வதற்கு ஏதும் கிடைக்காவிட்டால் பொதுத்துறை நிறுவனங்களின் விற்பனை குறித்து பேசுவார்கள். எல்.பி.ஜி என்று முதலில் ஆரம்பித்து வைத்தது காங்கிரஸ் தான். அதன்படி உலக சந்தைகளில் போட்டி போடுவதற்கு இங்குள்ள தனியார் நிறுவனங்களின் கட்டமைப்பை தரம் உயர்த்த வேண்டும், அதற்காக தனியார் நிறுவனங்களை அரசு ஊக்குவிக்க வேண்டும். சுதேசி, சுய சார்பில் முன்னணியில் இருக்கும் இந்தியாவில் ஆரம்ப காலத்தில் நிலக்கரி, ரயில் விமானம் போன்ற நிறுவனங்களை நடத்த தனியார் யாரும் முன்வரவில்லை. ஆனால் தற்போது தனியார் பலர் தாமாக முன்வந்துள்ளனர்.

      அதன்படி ஏர் இந்தியா நிறுவனம் தற்போது தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் சாமானிய மக்கள் யாரும் பாதிப்படைய மாட்டார்கள், அரசுக்கு வருவாய் இழப்பு ஏதும் ஏற்படாது. தனியாருக்கு லாபம் கிடைத்தால் அரசின் வரி வருவாயும் அதிகரிக்கும். பலனில்லாமல் மற்றும் அரசின் சலுகைகளால் இழப்பு ஏற்படும் நிறுவனங்கள்தான் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இல்லை என்றால் அரசுக்கு இழப்பு அதிகரித்து, நிதிச்சுமையை சமாளிக்க பொது மக்களிடம் வரி வசூல் செய்ய வேண்டிய நிலை உருவாகும். எனவே தான் குறிப்பிட்ட நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்தார்.

   மேலும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் தைரியம் காங்கிரஸ் கட்சிக்கு கிடையாது. அதனை பாஜக செயல்படுத்திக் காட்டி உள்ளது. கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சி, மானிய விலையில் பெட்ரோல், டீசல்களை விற்பனை செய்ததால் வளைகுடா நாடுகளிடம் இந்தியாவிற்கு பல லட்சம் கோடி கடன் ஏற்பட்டது. இதனால் நமது எதிரி நாடான பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படும் வளைகுடா நாடுகளுக்கு நாம் பயந்து செல்லவேண்டிய சூழல் இருந்தது. ஆனால் தற்போது மோடி அரசு நேரடி சந்தை விலையில் பெட்ரோல், டீசல்களை விற்பனை செய்வதால் கடன் சுமை குறைக்கப்பட்டுள்ளது.  இதனால் வளைகுடா நாடுகளின் அச்சுறுத்தலுக்கு நாம் பயப்பட வேண்டிய நிலை கிடையாது என்றார்.

     தற்போதுள்ள பொருளாதாரத்திற்கு இந்த விலை சரியானது. இதனை பொது மக்கள் உணர்ந்துள்ளனர். எப்படி தங்கத்தின் விலை உயர்வை ஏற்றுக் கொண்டார்களோ, அதே போல பெட்ரோல் விலை உயர்வையும் மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். அரசியல் கட்சியினர் தான் பொது மக்களை குழப்பி வருவதாக தெரிவித்தார்.

Tags:    

Similar News