குற்றங்களை தடுத்திட விழிப்புணர்வு விழா

தேனி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுத்திடுவதற்காக புன்னகையைத் தேடி என்ற விழிப்புணர்வு நிகழ்வை தேனி எஸ்.பி.துவக்கி வைத்தார்.

Update: 2021-02-02 18:13 GMT

     "ஆப்ரேஷன் ஸ்மைல்"-  புன்னகையைத் தேடி என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் உள்ள  அனைத்து மாவட்டங்களிலும்  பிப்ரவரி 1முதல் 15வரை நடைபெறுகிறது. ‌குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, காணமல் போன குழந்தைகளை மீட்பது, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது உள்ளிட்டவைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.  


தேனி மாவட்டத்தில் இதற்கான துவக்க விழா இன்று  சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் கிராமத்தில் நடைபெற்றது. ‌நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி குத்துவிளக்கு ஏற்றியும், விழிப்புணர்வு வாகனத்தை கொடி அமைத்தும் துவக்கி வைத்தார். மாவட்ட குழந்தைகள் நலக்குழு, சைல்டு லைன், தொழிலாளர் நலன், சமூக நலம் மற்றும் காவல்துறை உள்ளிட்டோர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழு, மாவட்டத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள்,  சிறு, குறு மற்றும் கனரக தொழில் நிறுவனங்கள், தொழிற் கூடங்கள், உள்ளிட்ட இடங்களில் ரகசிய ஆய்வு நடத்துவார்கள்.

     இந்த ஆய்வில் கண்டறியப்படும் குழந்தைகள் மீட்கப்பட்டு அவர்களின் எதிர்காலத்தை  மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், மேலும் சம்பந்தப்பட்ட தொழில்நிறுவனங்கள், கடைகளின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கும் இக்குழு பரிந்துரைக்கும். இதுதவிர காணமல் போன குழந்தைகளை மீட்பது, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ளும்.

இந்த துவக்க விழா நிகழ்ச்சியில், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கரன், மாவட்ட குழந்தைகள் நல குழு தலைவர் சுரேஷ்,  தேனி சைல்டு லைன் இயக்குனர் முஹம்மது ஷேக் இப்ராஹிம், சமூக நலன், தொழிலாளர் நலன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

        


Similar News