லண்டனில் இருந்து தேனி வந்தவருக்கு கொரோனா – குடும்பத்தினருக்கும் தொற்று

லண்டனில் இருந்து தேனி வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது, அவருடன் தொடர்பில் இருந்த அவரது அப்பா மற்றும் அத்தைக்கும் தொற்று .

Update: 2020-12-27 18:08 GMT

தேனி மாவட்டம் ஸ்ரீரங்கபுரத்தைச் சேர்ந்த 36 வயதான நபர் லண்டனில் வேலை செய்து வந்தார். கடந்த 20ஆம் தேதி லண்டனில் இருந்து சொந்த ஊரான தேனி அருகே உள்ள ஸ்ரீரங்கபுரத்திற்கு வந்துள்ளார்.

தொடர்ந்து காய்ச்சலாக இருந்ததால் இவர் தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்ற அச்சத்தில் தனியார் மருத்துவமனையில் அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டால் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் அவர் உடனடியாக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த நபர்களிடம் நடத்திய பரிசோதனையில் அவரது அப்பா மற்றும் அத்தைக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால் அவர்களும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனித்தனி வார்டுகளில் சிகிச்சைக்காக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

சமீபகாலமாக லண்டனில் இருந்து வரும் நபர்களுக்கு புதிய வகை அபாயகரமான கொரோனா தொற்று பரவி வருவதால் மூன்று பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே இவர்கள் வழக்கமான கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனரா? அல்லது புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்களா? என்பது தெரியவரும்.

லண்டனில் இருந்து தேனி வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாலும் அவருடன் தொடர்பில் இருந்த நபர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதாலும் தேனி மக்கள் பீதியில் உள்ளனர்.

Similar News