தஞ்சையில் கோவாக்சின் தடுப்பூசி தட்டுப்பாடு, 2வது தவணை போட்டுக்கொள்ள முடியமல் தவிப்பு

தஞ்சை மாவட்டத்தில் கோவாக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் 2வது தவணையை போட்டுக் கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.

Update: 2021-05-22 08:45 GMT

தஞ்சையில் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.(கோப்பு காட்சி)

தஞ்சாவூர் மாவட்டத்தில் கோவாக்சின் ஊசி கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கலால், இரண்டாவது டோஸ் போட முடியாமல், உடலில் பக்கவிளைவுகள் ஏற்படுமோ என்ற அச்சத்தில், பொதுமக்கள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தவித்து வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகாரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகாரிக்கும் நிலையிலும், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வும் அதிகளவில் மக்கள் மத்தியில் சென்றடைந்ததால், தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அதன் தேவையும் நாளுக்கு நாள் அதிகரிக்க துவங்கியுள்ளது.

ஆரம்பத்தில், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், இதுவரை 1,79,000 கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். தற்போது, மாவட்டத்தில் கோவிஷீல்டு ஊசிகள் மட்டுமே செலுத்தப்பட்டு வருகிறது. கோவாக்சின் ஊசி தடுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்; கோவாக்சின் முதல் டோஸ் போட்டுக்கொண்ட நிலையில், இரண்டாவது டோஸ் போடுவதற்கான நாள்களை விட, ஒரு வாரத்திற்கு மேலாக கடந்து விட்டது. அரசு மருத்துவமனைகளில் ஊசி இல்லை என திரும்பி அனுப்பி விடுகிறார்கள். ஊசி குறித்து கேட்டாலும் முறையான பதில் அளிப்பது இல்லை. முதல் டோஸ் போட்டுக்கொண்ட நிலையில், இரண்டாவது டோஸ் காலதாமதாக செலுத்திக்கொண்டால், உடலில் பக்கவிளைவுகள் ஏற்படுமோ என அச்சமாக உள்ளது என்றனர்.

இது குறித்து தஞ்சாவூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் (பொறுப்பு) நமச்சிவாயம் கூறுகையில்; தற்போது மாவட்டத்தில் 77 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், கோவிஷீல்டு போடப்பட்டு வருகிறது. 5 ஆயிரம் ஊசிகள் இருப்புள்ளது. கோவாக்சின் சில நாட்களாக வராத நிலையில், இரண்டு நாள்களில் வந்து விடும். பொதுமக்கள் யாரும் அச்சம்பட தேவையில்லை. ஊசி வந்த பிறகு முறையாக செலுத்தப்படும் என்றார்.

Tags:    

Similar News