விண்ணணூர்பட்டியில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட கிராம மக்கள் வலியுறுத்தல்

விண்ணனுர் கிராம மக்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்

Update: 2023-12-31 09:30 GMT

மாவட்ட ஆட்சியர் தேர்வு செய்து, ஒப்புதல் அளித்தவாறுஊராட்சி மன்ற அலுவலகம் விண்ணணூர் பட்டியில் கட்டப்பட வேண்டுமென வலியுறுத்தி தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்

 மாவட்ட ஆட்சியர் தேர்வு செய்து, ஒப்புதல் அளித்தவாறு ஊராட்சி மன்ற அலுவலகம் விண்ணணூர் பட்டியில் கட்டப்பட வேண்டுமென தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் விண்ணனுர் கிராம மக்கள் இன்று கோரிக்கை மனு அளித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், காங்கேயம் பட்டி ஊராட்சியில் சுமார் ஆறு கிராமங்கள் உள்ளன. ஏறத்தாழ 3 ஆயிரம் மக்கள் தொகை வசித்து வருகின்றனர்.  பெரிய காங்கேயம் பட்டியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் பழுதடைந்து சேதமடைந்து உள்ளது.

இதற்கு மாற்றாக ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்கு காங்கேயம் பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஆறு கிராமத்திலும் ஆய்வு செய்ய பொழுது மையமாக உள்ள விண்ணணூர்பட்டி கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் பெறப்பட்டது. ஆனால் தற்போது இந்த இடம் மாற்றப்பட்டு பெரிய காங்கேயம் பட்டி கிராமத்தில் கட்ட தற்போது ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதை கண்டித்து விண்ணனுர் கிராம மக்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

இந்த மனுவில் காங்கேயம் பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட விண்ணனுர் பட்டி கிராமத்தில் கடந்த 40 வருடங்களாக எந்த ஒரு அரசு பொது கட்டிடமும் கட்டப்படவில்லை, எங்களது கிராமம் புறக்கணிக்கப் பட்டுள்ளது, ஊராட்சிக்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் சுழற்சி முறையில் கிராம சபா கூட்டம் மற்றும் அரசு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துவது என்ற விதிமுறை இருந்தும் பொது கட்டிடம் இல்லாததால் விண்ணணூர் பட்டி கிராமம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது.

6 கிராமங்களில் மையமாக உள்ள விண்ணணூர்பட்டி கிராமத்தில் அரசு சேவை மையம், சமுதாயக்கூடம் , ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் பொதுமக்களை தங்க வைப்பதற்கு எந்த ஒரு இடமும் இல்லாத நிலை உள்ளது.கடந்த 2022 ஆம் ஆண்டு பழுதடைந்த ஊராட்சி மன்ற அலுவலகத்தை கட்டி இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு அதிகாரிகள் இடத்தை ஆய்வு செய்தனர்.

ஏற்கெனவே ஊராட்சி மன்ற அலுவலகம் இருந்த பெரிய காங்கயம்பட்டி மற்றும் விண்ணனுர் பட்டி கிராமங்களில் இரண்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டது. பெரிய காங்கேயம் பட்டியில் நெற்களம் உலர்த்தும் தளம் மற்றும் உயர்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இருப்பதாலும், ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு போதிய இடம் இல்லாதாலும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் விண்ணனுர் பட்டி கிராமத்தை தேர்வு செய்தனர், அதற்கு ஒப்புதல் அளித்து நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தற்போது பெரிய காங்கேயம் பட்டி கிராமத்தைச் சார்ந்த ஒன்றிய கவுன்சிலர் அருமைசெல்வி ரமேஷ் நெல்உலர்த்தும் தளமாக இருந்த இடத்தை மண்ணைப் போட்டு மூடி மறைத்து விட்டு, ஊராட்சி அலுவலகம் கட்டுவதற்கு இடம் இருப்பதாக கூறி தனது செல்வாக்கால் ஒன்றிய பெருந்தலைவர் துணையுடன் மாவட்ட ஆட்சியரால் ஒப்புதல் அளித்த நிர்வாக அனுமதியை ரத்து செய்துவிட்டு,பெரிய காங்கேயம் பட்டி கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை கட்ட நிர்வாக அனுமதி பெற்றுள்ளார்.

ஒன்றிய கவுன்சிலரின் இந்த நடவடிக்கையானது பெரிய காங்கேயம்பட்டி மற்றும் விண்ணணூர் பட்டி கிராம மக்களுக்கு இடையேயான ஒற்றுமையை சீர்குலைத்து, பொது அமைதியை பங்கம் விளைவித்துள்ளது, சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தி உள்ளது .அதனால் மேற்கண்ட கிராமங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து ஊராட்சி மையப் பகுதியில் அமைந்துள்ள விண்ணனுர் பட்டி கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்ட ஏற்கெனவே மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் ஆய்வு செய்து ஒப்புதல் அளிக்கப்பட்ட அடிப்படையில், ஊராட்சி மன்ற அலுவலகத்தை விண்ணணூர் பட்டியில் கட்ட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நிகழ்வில் வளரும் தமிழக கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் பரமசிவம் தலைமையில் திமுக நிர்வாகி மதியழகன்,ஆனந்த் அண்ணா திமுக நிர்வாகி கமல் ராஜ் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர், குணசேகரன் பி ஜே பி மாவட்ட துணை செயலாளர், அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் கதிரவன் ரமேஷ், உலக தமிழர் பேரமைப்பு நிர்வாகி மதிவாணன் மற்றும் கிராம நிர்வாகிகள் பாரி அழகிரிசாமி,பார்த்திபன் அன்புகுமார், வைரம், செல்லபாப்பா,சரோஜா, நாகராஜ்,காளிமுத்து, தினேஷ்குமார் ஆகியோர் பங்கேற்று  மாவட்ட ஆட்சியரிடம்  மனு அளித்தனர்

Tags:    

Similar News