தஞ்சாவூருக்கு வந்த வேர்களைத் தேடி திட்டப் பயணம்

உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளை புதுப்பிக்கும் வேர்களைத் தேடி திட்டப் பயணம் இன்று தஞ்சாவூர் வந்தடைந்தது

Update: 2023-12-30 16:00 GMT

பண்பாட்டு பயணத்திற்காக ஆஸ்திரேலியா, கனடா, பிஜி, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து 58 இளைஞர்கள் தேர்வாகி தஞ்சாவூர் வந்த இவர்களை மாவட்ட ஆட்சியர் தீபக்ஜேக்கப் வரவேற்ரார்.

உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளை புதுப்பிக்கும்  வேர்களைத் தேடி திட்டப் பயணம் இன்று தஞ்சாவூர் வந்தடைந்தது. அயலகத்தில் வாழும் தமிழர்களின் நலன் காக்கவும், அயலகத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து கல்வி, வேலைவாய்ப்புகள் என்று இடம்பெயரும் தமிழர்களை பாதுகாப்பாக வழிநடத்தவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வழிகாட்டுதலுடன் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை செயல்பட்டு வருகிறது.

அயலகத் தமிழ் உறவுகளை ஒன்றிணைக்கும் முகமாக தமிழ்நாடு அரசு அயலகத் தமிழர் தினம்" எனும் சிறப்பு தினத்தை அறிவித்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய நாட்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னையில் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அயலகத் தமிழர்களின் கலாசார உறவுகளை மேம்படுத்துவதின் ஒரு நகர்வாக பல தலைமுறைகளுக்கு முன்பு அயலகம் இடம்பெயர்ந்து அங்கு வாழும் அயலகத் தமிழர்களின் குழந்தைகளுக்காக "வேர்களைத்தேடி" என்றொரு பண்பாட்டுப் பயணத் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இத்திட்டம் மூலம் அயலகத்தில் வாழும் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட தமிழர்களின் இளைஞர்களை தமிழ்நாடு அரசு செலவில் தமிழ்நாட்டிற்கு வரவழைத்து அவர்கள் தமிழ் மற்றும் தமிழர்தம் பெருமிதங்களை உணரும் வகையில் தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு ஒரு பண்பாட்டு பயணம் ஏற்பாடு செய்ய உத்திரவிட்டிருந்தார் தமிழ்நாடு முதலமைச்சர் இதனடிப்படையில் வேர்களைத் தேடி திட்டத்தின் முதல் பயணம் கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி மகாபலிபுரத்தில் தொடங்கப்பட்டது தமிழ்நாடு அயலகத் தமிழர்கள் நலத்துறை அமைச்சர்  செஞ்சி.கே.எஸ்.மஸ்தான்  இப்பண்பாட்டு பயணத்தை தொடக்கி வைத்தார்.

இப்பண்பாட்டு பயணத்திற்காக ஆஸ்திரேலியா, கனடா, பிஜி, இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து 58 இளைஞர்கள் தேர்வாகி தமிழ்நாடு அரசு செலவில் சென்னை வந்தடைந்துள்ளனர். *இவர்கள் சென்னையில் இருந்து மகாபலிபுரம், புதுச்சேரி தஞ்சாவூர் மாவட்டத்தில் தாராசுரம், சுவாமிமலை உள்ள பூம்புகார் சிற்பக்கூடத்தில், தஞ்சாவூர் புவிசார் குறியீடு பெற்றுள்ள தஞ்சாவூர் கலைத்தட்டு, தஞ்சாவூர் ஓவியம், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, தஞ்சாவூர் நெட்டி வேலை, நாச்சியார் கோவில் குத்து விளக்கு, திருபுவனம் பட்டு, கலம்காரி ஓவியம், தஞ்சாவூர் வீணை, நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம் போன்ற பொருட்களின் தயாரிப்பு முறைகளை பார்வையிட்டார்.

தொடர்ந்து தஞ்சாவூர் அரண்மனை வளாகம், அரண்மனை வளாக கலைகூடம், சரஸ்வதி மஹால் , தர்பார் கூடம் ஆகிய இடங்களை பார்வையிட்டு, தஞ்சாவூர் அருங்காட்சியகம், பெரிய கோவில் ஆகிய இடங்களுக்கு பயணித்து தமிழர்களின் கட்டிடக்கலை ,சிற்பக்கலை, இயல், இசை , நாட்டியம், சிற்பம், ஓவியம் ,சுதந்திரப் போராட்ட வரலாறு ,பல்வேறு தமிழ் இலக்கிய வரலாறு ஆகியவற்றை அறிந்து கொண்டார்கள். இவர்களுக்கு மிருதன்தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர் களுடன் . கலந்துரையாடல்களும், பயிற்சி வகுப்புகளும் இடம் பெற்றிருந்தது.

இவர்களுக்கு பிரத்யேகமாக பெத்த அண்ணன் கலையரங்கில் இசை மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் பண்பாட்டு பயணத்திற்காக வந்த 58 இளைஞர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கி கௌரவித்தார்.

தொடர்ந்து சிவகங்கை, தூத்துக்குடி, கன்னியாகுமர், திருநெல்வேலி, மதுரை, திருச்சி, செஞ்சிகோட்டை, காஞ்சிபுரம் ஆகிய இடங்களுக்கு பயணிக்க மேற்கொள்ள உள்ளார்கள். இந்த இரு வார பயணத்தின் மூலம் தமிழர்களின் கலாசாரம், வரலாறு, மொழியியில் உட்பட பல்வேறு திறன்களை கற்றுணர்வார்கள்

மூன்றாவது ஆண்டாக அயலகத் தமிழர்கள் தினம் வரும் ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சென்னையில் உள்ள நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.இவ்விழாவில் இந்த இளைஞர்கள் பங்கேற்று பகிர்ந்துகொள்வார்கள். தங்களின் அனுபவங்களை மேலும் தங்கள் நாடுகளுக்கு சென்று தமிழர்களின் கலாசார தூதுவர்களாகவும் செயல்பட ஊக்கம் பெறுவார்கள்.

இந்நிகழ்வில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி.பாபாஜி ராஜா பான்ஸ்லே, தஞ்சாவூர் வட்டாட்சியர்  அருள்ராஜ் , சுற்றுலா அலுவலர்  நெல்சன், தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர்  முத்துக்குமார், தொல்லியல் பொறியாளர்  தினேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்


Tags:    

Similar News