அமைச்சர் கூட்டத்தில் முககவசம் அணியாத எம்எல்ஏ
அமைச்சர் கூட்டத்தில் தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம் மட்டும் முககவசம் அணியாமல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்மை துறை அமைச்சர் தலைமையில், விவசாய நிதிநிலை அறிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சி தலைவர்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தற்போது கொரோனா தொற்றால் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும் முககவசம் அணியாதவர்கள் மீது அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் உட்பட அனைவரும் முககவசம் அணிந்திருந்த நிலையில், தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம் மட்டும் முககவசம் அணியாமல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.