விவசாயிகளுக்கு ஆதரவாக இரண்டு சக்கர வாகன பேரணி

Update: 2021-01-21 06:45 GMT

தென்காசி மாவட்டத்தில் அனைத்துக் கட்சி சார்பில் ஜனவரி 26 ம் தேதி அன்று விவசாயிகளுக்கு ஆதரவாக இரண்டு சக்கர வாகன பேரணி நடைபெற உள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டத்தில் வருகின்ற ஜனவரி 26 ம் தேதி அன்று இரு சக்கர வாகன பேரணி நடைபெற உள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் தென்காசி மாவட்டம் சுரண்டையில் உள்ள நெல்லை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

கூட்டத்திற்கு திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் பழனி முன்னிலை வகித்தார். மதிமுக மாவட்ட தலைவர் ராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் வரும் ஜனவரி 26 ம் தேதி அன்று விவசாயிகளுக்கு ஆதரவாக தென்காசியில் நடைபெறும் பேரணியில் அனைத்துக் கட்சி சார்பில் திரளாக கலந்து கொள்வதென முடிவு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அனைத்து கட்சி மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News