கழிவுகள் கொட்ட வந்த லாரி சிறைபிடிப்பு

Update: 2021-01-24 04:45 GMT

சங்கரன்கோவில் அருகேயுள்ள திருவேங்கடத்தில் கழிவுகள் கொட்ட வந்த லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

திருவேங்கடம் தாலுகாவிற்கு உட்பட்ட பெரூங்கோட்டூர் கண்மாய் பகுதிக்குள் லாரி ஒன்று துர்நாற்றம் வீசக்கூடிய கழிவுகளை கொண்டு சென்றுள்ளது. இது குறித்து அறிந்ததும் கிராம மக்கள் அங்கு விசாரிக்க சென்ற போது லாரியில் இருந்து இறங்கிய இருவர் தப்பி ஓடியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த கிராம மக்கள் ஓட்டுநரை பிடித்து வைத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் ஓட்டுநரிடம் விசாரிக்கும் போது முன்னுக்கு பின் முரணான தகவல் கூறியதால் லாரியை காவல் நிலையம் எடுத்து செல்ல முற்பட்டனர். ஆனால் அப்பகுதி மக்கள் லாரியை எடுத்து செல்லகூடாது, வாகனத்தில் இருப்பது என்ன என்று தெரியப்படுத்த வேண்டும் என்று கூறி லாரியை சிறைபிடித்தனர்.ஆள் நடமாட்டம் இல்லாத இரவு நேரங்களில் மருத்துவ கழிவு மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டி விட்டு செல்வதாகவும், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கூட இம்மாதிரியான சம்பவம் நடைபெற்று உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி லாரியை சிறை பிடித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News