இராமேஸ்வரம்: செய்தியாளர் வீட்டில் 15 சவரன் நகை, ரூ. 1 லட்சம் திருட்டு
இராமேஸ்வரம் பகுதியில், செய்தியாளர் வீட்டில் 15 சவரன் நகை மற்றும் ரூ. 1 லட்சம் திருடு போனது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் சல்லிமலை பகுதியில் வசித்து வருபவர் லோகநாதன். இவர், தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு, குடும்பத்தினருடன் சென்னைக்கு சென்றவர், இன்று காலை வீடு திரும்பினார்.
அப்போது, வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு இருப்பது கண்டு, லோகநாதன் அதிர்ச்சி அடைந்தார். பீரோவை பார்த்தபோது அதில் இருந்த 15 பவுன் சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் காணாமல் போனது தெரியவந்தது. உடனடியாக இராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்திற்கு, அவர் தகவல் கொடுத்துள்ளார்.
அதன்பேரில் விரைந்து வந்த காவல்துறையினர், தடவியல் நிபுணர்களின் உதவியுடன், கை ரேகைகளை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இராமேஸ்வரம் பகுதியில் நடந்த இந்த திருட்டு சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.